
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்தல் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தம்மை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளாதிருத்தலைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரியே அவர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியுள்ள தகவல்களின் அடிப்படையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எந்த நேரத்திலும் தம்மைக் கைது செய்யலாம் அல்லது தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்பதைக் குறிப்பிட்டே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்படி ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவொன்றை தமக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் இதற்கு முன்னர் பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள மனுதாரர், இந்த நிலையில் சனல் 4 வெளிப்படுத்தியுள்ள தகவல்களின் அடிப்படையில் எந்த நேரத்திலும் தம்மைக் கைது செய்யலாம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். தாம் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளரான ஷானி அபேசேகர போலி சாட்சிகளை உருவாக்கிய சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், இவ்வாறான பின்னணியில் நீதியானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை ஷானி அபேசேகரவிடம் எதிர்பார்க்க முடியாது என்பதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


