
(திரான்சி நகர முதல்வரின் முள்ளிவாய்க்கால் நினைவுதின உரையின் தமிழாக்கம் ) (17.05.2026 sci)
வணக்கம் .
அம்மையார்களே,ஐயாமார்களே !
இங்கு இன்னமும் நிகழ்வு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கக் கூடிய, நான் சற்று முன் பார்த்த திருமதி பிலிப் டுமாஸ் (Philippe Dumas) அவர்களுக்கும், அவரது சங்கத்திற்கும், இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு எங்களை மீண்டும் ஒருமுறை அழைத்தமைக்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பது பல பிரெஞ்சு மக்களுக்குத் தெரியாது, ஆனால் தமிழர்கள் அனைவருக்கும் இது இயல்பாகவே தெரியும். சொந்தக் குடும்பங்களிலேயே பேரிழப்புகளைச் சந்தித்த உங்களில் சிலருக்கான நினைவேந்தல் மற்றும் மரியாதைக்கான இந்தக் குறியீட்டுச் செயல்களுக்கான காரணங்கள், உங்கள் சமூகத்தைத் தாண்டி மிகவும் பரவலாக அறியப்பட வேண்டும்.
இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூடியுள்ள திருமதி ஆட் லகார்ட் (Aude Lagarde) மற்றும் நகர சபை நிர்வாகக் குழுவினரின் முன்னிலையில், உங்கள் பக்கம் நின்று இந்த நினைவேந்தலில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இதற்கு முன்னர் நகர சபை பிரதிநிதிகள் எவரும் இந்த நினைவேந்தலில் பங்கேற்றதில்லை என்பதால் நான் இதனை இங்கு குறிப்பிடுகிறேன்.
பிரெஞ்சு குடியரசின் மற்றும் ட்ரான்சி நகரத்தின் பிரதிநிதியாக நான் இங்கு இருப்பதற்கான காரணம் உங்களுக்கு நன்கு தெரியும். இந்த நிகழ்வு உண்மையில் இன்னும் மிகப்பெரிய அளவிலான கவனத்தைப் பெற வேண்டும், மேலும் அது அதனைப் பெறும். ஏனெனில், அடுத்த ஆண்டு, அதாவது மே 18, 2027 அன்று, நீங்கள் பல ஆண்டுகளாகக் கூடும் இந்த நகரசபை சதுக்கத்தில் நாம் ஒன்றுகூடப் போவதில்லை. மாறாக, விரைவில் திறக்கப்படவுள்ள கலாச்சார மையத்தின் முன்பாக நாம் ஒன்றுகூடுவோம். அங்கு எங்கள் நகர சபை, தமிழ் இனப்படுகொலையின் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை அர்ப்பணிக்கவுள்ளது.
இந்தத் தமிழ் இனப்படுகொலையானது, இலங்கை அரசாங்கத்தால் மட்டுமன்றி, குறிப்பாக சிங்களவர்களாலும், உலகின் பிற பகுதிகளாலும் இன்றும் பெருமளவில் மறுக்கப்பட்டு வருகிறது. உருவாக்கப்பட்டு வரும் இந்தச் சிலை சிறு தாமதத்திற்கு உள்ளாகியிருந்தாலும், அதனை ஊடக நூலகத்தின் (médiathèque) முன்பாக, கலாச்சார மையத்திற்கு எதிரே நிறுவ நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம், பெருமளவிலான ட்ரான்சி நகர மக்கள், தமிழ் சமூகத்தினர் மட்டுமன்றி, இந்த நினைவுச் சின்னத்தைக் கடந்து செல்லும் அனைத்து மக்களும், 80களில் இருந்து இலங்கையில் நடந்தேறிய அந்தப் பேரிழப்பைப் பற்றி, பெயர் சொல்ல மறுக்கப்படும் அந்த இனப்படுகொலையைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
நாம் இதனை வெளிக்கொண்டு வர வேண்டும். உண்மையில் உலகில் இன்றுவரை அங்கீகரிக்கப்படாத ஒரேயொரு இனப்படுகொலை இதுதான். பல இனப்படுகொலைகள் நடந்துள்ளன; இரண்டாம் உலகப் போரின் போது இதே ட்ரான்சி நகரத்தில் ஒன்று நடந்தது, அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆர்மீனியாவில் நடந்தது, ருவாண்டாவில் நடந்தது என கடந்த தசாப்தங்களில் பல இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் தமிழ் இனப்படுகொலை மட்டுமே இன்னமும் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது.
இந்தச் சிலை ஒரு பகிர்வின் அடையாளமாக இருக்கும்; இதன் மூலம் நீங்கள் உங்கள் உறவுகளை, இறந்தவர்களை நினைவுகூரவும் அஞ்சலி செலுத்தவும் முடியும். அதேவேளையில் மற்றைய மக்களும் அங்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வார்கள். எதற்காக இதைத் தெரிந்துகொள்ள வேண்டும், எதற்காக இந்த நினைவேந்தல்? இன்னமும் உயிருடன் இருக்கும், சர்வதேச அளவில் இதுவரை எந்தவித விசாரணையோ, வழக்கோ, தண்டனையோ வழங்கப்படாத அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவே. இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை நாம் தண்டிக்கத் தவறினால், அந்த வரலாற்றை மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள நாம் சபிக்கப்படுவோம்.
ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் எப்படி இதற்கு எதிராகக் குரல் கொடுக்கிறீர்களோ, நாமும் இதற்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும். மேலும், முதலாவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும், அதன்பின்னர் இலங்கை அரசாங்கத்தின் மீதும் பிரெஞ்சு குடியரசுத் தலைவரும் பிரதமரும் தேவையான அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறுவது பிரான்சுக்குப் பெருமை சேர்க்கும் செயலல்ல என்பதையும் நான் கூற விரும்புகிறேன்.
40,000 முதல் 100,000 வரையிலான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்று குவித்த ஓர் இனப்படுகொலையில் பங்கேற்ற, கட்டளையிட்ட, அதனைச் செயற்படுத்திய நபர்களை ஒதுக்கிவைத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த இந்த அழுத்தம் அவசியம். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளான சுதந்திரத்திற்கான உரிமை, சொத்துரிமை, கலாச்சார உரிமை மற்றும் மத உரிமை ஆகியவை இன்றும் தமிழ் சமூகத்திற்கு மறுக்கப்படுகின்றன.
நீங்கள் தாயகமாகக் கொண்ட நாட்டில், அந்த உரிமைகள் இன்னமும் ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வருகின்றன. மற்றைய நகரங்களில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அதிகளவில் காணும் மக்கள், நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்பதையோ, இந்தியாவின் தெற்கே உள்ள அந்தச் சிறிய தீவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்து பிரான்சிலும், ஐரோப்பாவிலும் ஏன் தஞ்சம் புகுந்தீர்கள் என்பதையோ அறியாமல் இருக்கிறார்கள்.
கிரேட் பிரிட்டனிலும் ஒரு பெரிய தமிழ் சமூகம் உள்ளது. இங்கே கூடி இருக்கும் தாய்மார்களே, பெருமக்களே, நீங்கள் சந்திக்கும் பெரும்பாலான நபர்கள் குறித்து நான் தமிழ் சமூகத்தினரிடம் மட்டும் பேசவில்லை, ஒட்டுமொத்த ட்ரான்சி நகர மக்களிடமும் பேசுகிறேன். இலங்கையிலிருந்து வந்து நமது நகரத்தில் வசிக்கும் மக்கள், இந்த இனப்படுகொலையினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட அரசியல் அகதிகள் ஆவர். மேலும் அவர்கள், தமிழ் சமூகத்திற்கு எதிராக இலங்கை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளானவர்கள். சற்று முன்பு ஒரு உரையில் நான் கேட்டேன்: அந்த உரிமைகள் அங்கீகரிக்கப்படும் வரை அங்கே அமைதி இருக்காது, குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அமைதியும் நீதியும் கிடைக்காது. தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படாத வரையிலும், அதே தீவைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு மக்கள் மீது சிங்களவர்கள் அடக்குமுறை மனப்பான்மையைக் கொண்டிருக்கும் வரையிலும், இலங்கையில் இயல்பு வாழ்க்கை திரும்பப் போவதில்லை.
ஆம், மே 18 ஒரு முக்கியமான நாள், இது நினைவுகூரலுக்கான நாள். இது எதிர்காலத்தில் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டு எங்களைச் சுற்றி இத்தனை மக்கள் பிரதிநிதிகளைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று சொல்வதுடன், உங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் கூடியிருப்பதைக் காண்கிறேன். தங்களது தாய்வழி கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்ளும் வகுப்புகள் மூலமாக மட்டுமன்றி, நாம் சற்றுமுன் ஏற்றிய அந்த நினைவேந்தல் தீபத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உறுதியின் மூலமாகவும் இங்கு ஏராளமான குழந்தைகள் வந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நாம் இன்னும் அதிக எண்ணிக்கையில் ஒன்றுகூடுவோம். இனிமேல் இந்த நினைவேந்தல் நிகழ்வை உங்கள் சங்கம் நடத்துவதற்குப் பதிலாக, ட்ரான்சி நகர சபையே அதிகாரப்பூர்வமாக முன்னின்று நடத்தும் என்ற முன்மொழிவை நான் இங்கே வைக்கிறேன். இதன் மூலம் ஒட்டுமொத்த ட்ரான்சி நகர மக்களையும் நாங்கள் அழைக்க முடியும்; அவர்கள் தமிழர்களின் வரலாற்றையும், தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றையும், தமிழர்கள் நமது நாட்டிலும் நமது நகரத்திலும் இருப்பதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ள முடியும். இனி உங்களுக்குள் மட்டுமன்றி, பிரெஞ்சு குடியரசின் அனைத்து குடிமக்களுடனும் இணைந்து இந்த நினைவேந்தலை நாம் அனைவரும் கூட்டாக முன்னெடுப்போம். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.


