
பிரான்சுவாழ் தமிழீழ மக்களின் கண்ணீர் வணக்கம்! 28.04.2026
தமிழகத்திலும், தமிழீழ தேசத்திலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசத்திலும் தனது குரல் வளத்தால் வலுவையும், விடுதலை உணர்வையும் ஏற்படுத்தித் தக்க வைத்ததோர் உயிர் இன்று அடங்கிப்போய்விட்டது. காற்றலையிலும், விடுதலையிலும் பின்னிப்பிணைந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பயணித்ததொரு குரல் தனது 85 ஆவது அகவையில் ஓய்ந்து போனது. 1960 களில் பாடத்தொடங்கிய இக்குரல், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை பாடிவந்தது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி என்னும் இடத்தில் சிங்கிரிப்பட்டி கிராமத்தில் பிறந்த இவரின் இசைத்திறமையை, பாடும் ஆற்றலை ஐயா ஆதித்தனார் அவர்கள் கண்டறிந்தார். இவரின் காந்தக்குரல் பாவேந்தர் பாடலுக்கு பெரும் வரவேற்பையும் பெற்றது. அவரே இவருக்கு ‘தேனிசை’ என்னும் பட்டத்தையும் வழங்கியிருந்தார். இவரது பாடலில் முதற்பாடலாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் துன்பத்தையே கண்ட மலையகத்தில் வாழும் இந்திய மக்களின் துயரத்தையும், துன்பத்தையும் சொல்லும் பாடலான “செந்தமிழா மனம் பொங்குதடா…” என்ற பாடலாகும். அனைத்து மக்கள் மனதிலும் பதியவைத்த பாடலாகவும் புருவமுயர்த்தி இவரை பார்க்கவைத்தது. இவரின் புரட்சிப் பாடல்கள் தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப் போராளிகள் மனதில் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. இவரின் பாடல்களை தமிழீழ தேசியத் தலைவர்; 1980 களில் தம்முடன் உள்வாங்கிக் கொண்டார்.
அப்பொழுது முதல் தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பாடல்களை உருவாக்கி, அதனை தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாடிவந்தவர். இவரின் ஒரே அசையாத கொள்கையாக இருந்தது, தான் பாடினால் விடுதலைப் பாடல்களையே பாடுவேன் வேறு எந்தப் பாடல்களையும் பாடமாட்டேன் என்று தன் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தவர்; அவ்வாறே பாடியவர். அதனால் இந்திய மத்திய அரசாலும், தமிழ்நாடு மாநில அரசாலும் பெரும் நெருக்கடிக்குள் உள்ளாக்கப்பட்டார்.
1983 முதல் இவர் தமிழீழ விடுதலைக்காகப் பாடிய புரட்சிக்கவிஞர் காசிஆனந்தன், தமிழீழ தேச ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடல்கள் வைரங்கள் போன்றவை. 1991இல் தமிழீழ தேசத்திற்குச் சென்று யாழ். முற்றவெளியில் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய நிகழ்வும், தேசியத் தலைவரிடம் தனது பாடல்கள் தமிழீழ தேசமெங்கும் நேரடியாக சென்று ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய தமிழீழ தேசமாகிய வடக்குக்கிழக்கு ஒன்பது மாவட்டங்களில் இவரின் பாடல்கள் நேரடியாக இடம்பெற்றமை இவருக்குக் கிடைத்த பெரும் மகுடமாகவும், தனக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகவுமே கருதினார்.
இவரின் பாடல்கள் தாய்மண்ணைவிட்டு அந்த மண்ணின் நினைவுகளுடன் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழீழ மக்களின் மனதில் உள்ள உணர்வுகளை வெளியே சொல்லவும் உள்மனதில் அதை உள்வாங்கவும் பெரும் உணர்வுப்பாலமாக இருந்துவந்துள்ளது. தேனிசை செல்லப்பா அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பலதடவை வந்து பாடலால் பெரும் பலம் சேர்த்தார். தமிழின பொது எதிரிகள் இவரின் குரலுக்கும் பாடலுக்கும் பேச்சுக்கும் பரப்புரைக்கும் பெரிதும் பயந்தனர். அதனால் அவரின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. மனவுழைச்சலுக்குள் உள்ளாக்கப்பட்ட போதும் அன்றைய ஆட்சியாளர்களை விட்டுவைக்கவில்லை. நிகழ்வுகளில் எல்லாம் அவர்களின் வேசங்களை பாடல்களால் வெளிக்காட்டியிருந்தவர். இவர் ஒரு வரிச்சீருடை அணியாத கலைப் போராளியாகவே தமிழர்களால் பார்க்கப்பட்டார். தன்னுடன் இது முடிந்துவிடக்கூடாது என்றும் தனது மகன், மகள், பேரன் பேர்த்தியையும் இப்பணியில் ஈடுபடுத்தியவர்.
ஈழத்தமிழ்மக்கள் தமது உள்ளத்தீயில் கொண்டுள்ள “தமிழீழ தேசம்” என்ற விடுதலைப் பசிக்கும் தாகத்திற்கும், வெளிச்சத்திற்கும் இவரும் நெய்யாக இருந்திருக்கின்றார். வைரமான வரிகள் கொண்ட எமது உணர்வுப் பாடல்களுக்கு இசையாலும், குரலாலும் உயிர் கொடுத்தவர் என்றால் அது மிகையாகாது. இதை நாம் அனைவரும் உணர்ந்தால்தான் உயிரோட்டமாக கொண்டு வரமுடியும் என்பதற்கு அமைய கொண்டுவந்து ஒரு கலைஞனாக ஈழ தேசத்துக்காக தன்னுடைய பணியை செய்திருக்கின்றார்.
தமிழக தேசத்தில் பிறந்து, தமிழர்களுக்கு ஒரு தேசம் உதயமாகவேண்டும் அது தமிழீழமே என்ற கொண்டகொள்கையில் வழுவாது நின்ற மாமனிதர் இவராவார். இவரின் இழப்பு தமிழீழ தேசத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்திற்குமே ஆகும். காலங்கள் பல கடந்தாலும் தமிழீழ தேசத்தை நேசிக்கும் அத்தனை உள்ளங்களிலும் தலைமுறையிலும் இவரது பாடல்கள் குரலாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.


