
நெடியதொரு பயங்கரக்கனவு போன்று இரவுகள் கனத்தன. இருட்டு மூலைகளிலிருந்து விநோத உருவங்கள் நடை முளை கொண்டு நடந்து வருவது போன்ற பிரமை. ஆம் பிரமையேதான். இல்லாவிடில் இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்னும் உயிரோடிருக்கிறோமே.
இறுக அடைத்த கதவுகள் யன்னல்கள் வீட்டினுள் ஒரு வித இறுக்கத்தைப் புழுக்கத்தைத் தோற்றுவித்திருந்தது. முகங்களும் புழுங்கிக்கொண்டுதானிருந்தன.
யாருமேயில்லாதது போன்ற வெறுமை வீட்டினுள் நிலவினாலும் ஆட்கள் இருக்கத்தான் செய்தார்கள். முன் விறாந்தையிலிருந்த ஈசிசெயரில் அப்பா சாய்ந்து கிடந்தார். அவர் வாசித்த டால்ஸ்டாயின் ‘போரும் சமாதானமும்’ புத்தகம் கீழே கிடந்தது. அடையாளம் வைத்துப் புத்தகத்தை மூடுவதே அவர் வழமை. இன்றோ… வழமைக்கு மாறாகப் பக்கங்கள் நிலத்தில் படப் புத்தகம் கவிழ்ந்து கிடந்தது. நடுவிறாந்தையிலிருந்த கட்டிலில் அம்மம்மா முடங்கிக் கொண்டு அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி கிடந்தாள். சமையலறைக் கதவுடன் சாய்ந்தவாறு இருந்த அம்மா. அடிக்கடி சட்டைக்கையில் கண்ணைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அழுகிறாள் போல….. தம்பியின்…. அறைவிளக்கு வெளிச்சத்தில் கதிரையில் அவனிருப்பது சுவரில் நிழலாக விழுந்தது. கைகளிரண்டும் நாடியைத் தாங்கியவாறு இருப்பது தெரிந்தது. அவன் வெறுமனே எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருந்தான்.
முகங்களில் அப்பிக்கிடந்தது இருளா சோகமா எனத் தெரியாதவாறு… எல்லோர் முகங்களும் இருண்டு கிடந்தன.
எதுவுமே பேசாமல்…. எதுவுமே பேசப்பிடிக்காமல்… எது பேசினாலும் அழுது விடுவோமோ எனப்பயந்த… வாய்கள் இறுகமூடியிருந்தன. மனங்கள் மட்டும் புழுங்கி அவிந்து மூடிய உலையாய்த் தகித்துக் கொண்டிருந்தன.
கடந்த ஐந்து வருடங்களாகவே இரவுகள் பயம் தருவனவாய், எப்பொழுது விடியும் என்று ஏக்கந்தருவனவாய் இருந்தன. கூரை ஓட்டிலோ படலைத்தகரத்திலோ இருந்து எழும் சிறு அசைவும் ஒலியும் பேரிடியாய்…. பேரிரைச்சலாய்… மனங்களை அதிரவைத்தது.
மனங்களும் முகங்களும் பூரித்துப் பொலிந்து புன்னகை பூத்திருந்த விரவிக்கிடந்த அமையும் காற்றின்றி அசையாத மரங்களும், வெய்யில் தகித்த புல்வெளிகளும் கூட வசந்தம் பேசிய அந்த இனிய ஐந்து வருடங்களும் கனவே.
போர் சென்று முடிந்தபின் வந்த இந்த இருண்ட இலையுதிர் காலத்தில் எமக்கு உற்ற துணையாயிருந்தவன் அன்புதான்.
மற்றும் எந்த இரவை விடவும் இன்றைய இரவு கனத்துப் போய்க் கிடந்தது. காரணம், அன்புவின் இறப்பு. இன்னும் சூடு அடங்காத அன்புவின் உடல் முன் விறாந்தையில்…
அது தந்த மனத்துயரமும் பழைய நினைவுகளுமாய் நாங்கள்… முடங்கிப் போய்க் கிடந்தோம்.
யாரிந்த அன்பு? அன்பு யாரென்று யார் கேட்டாலும் நாங்கள் மௌனிப்பது வழக்கம். அன்பு எங்களில் ஒருவனாய், எம்மூரில் ஒருவனாய்… தெரு வழியே போகும் போராளிகளின் உற்ற நண்பனாய் அன்பு, தன் பெயரைப் போலவே அன்புருவாயிருந்தான்.
பருவ காலங்கள் மாறிமாறி வருவது போன்றிருந்தது. எங்கள் வாழ்க்கை…. துக்கமும் பயமும் விரவிக்கிடந்து முள்ளந்தண்டில் குளிர் பரப்பிய இலையுதிர் காலமும், பல்நிறவண்ணத்துப் பூச்சிகள் கலகலத்து சிறகடித்துப் பறக்க சுதந்திரக் காற்றும் மகிழ்ச்சியும் பொலிந்து கிடந்த வசந்த காலமுமாய் காலங்கள் மாறி மாறி வாழ்க்கையைப் பந்தாடின. “ஏன் வந்தாய்!” என சலிப்புற்று விரட்ட வைத்தன இலையுதிர் காலத்து இரவுகள். இரவுகளில் மரணங்கள் மலிந்து போயின. ஓலங்கள் சூழ்ந்தன. அதிகாலையில் மீந்திருக்கும் இரவின் இருள் முகங்களில் அப்பிக்கொள்ளும், கால்கள் தெருவில் இறங்கத் தயங்கும்.
இலையுதிர் காலப் பகல்களோ “எப்பொழுது வருவாய்?” என ஏங்க வைக்கும். இரவு மிச்சம் வைக்கும் பயங்கரங்கள் வீதியோரங்களில் கிடந்த போதும் கூட பகல் நம்பிக்கையூட்டியது. இரவுகள் ஒளியூட்டப்படும் எனும் நம்பிக்கையுரம் பகலிலேயே போடப்பட்டது.
இத்தகைய இலையுதிர் காலப் பகல்களிலும் இரவுகளிலும் அன்பு நம்பிக்கையின் அடையாளமாய் இருந்தான். படிப்படியாக அன்பு ஆட்களை இனங்காணத் தொடங்கினான். எதிரிகளெவர் நண்பர்களெவர் என அவனுக்குத் துல்லியமாகத் தெரிந்தது. அவர்களை எங்களுக்கு இனங்காட்ட விசேட ஒலிகளை அவன் கற்றுக் கொண்டான். வந்து போகும் போராளிகள் அவனுக்குப் பழக்கமானவர்களாயினர். அன்றுதான் ஒரு புது போராளி வந்தால் கூட அவரை தொடங்கியது எங்களுக்குப் பெரிய ஆச்சரியம். அது அவனை இனங்காண வைத்தது. காய்ந்த தலை புதர்மண்டிய முகங்கள், மெலிதாய் வரும் வெடிமருந்தின் மணம் அவர்களிடமிருந்து வெளிப்பட்டுப் பிரபஞ்சமெங்கும் பரவும் அன்பின் பலமிக்க எண்ணங்களின் அலை, எதை அன்பு இனங்கண்டான் என்பதை பேசத் தெரிந்திருந்தால் அவன் சொல்லியிருக்கக்கூடும்.
ஒரு இலையுதிர் காலத்தின் போது… காலம் கெட்டுக்கிடந்தது. எங்கள் இளைஞர்களே சிலர் எங்களுக்கு எதிரியாய் இருந்தார்களாம். இரவுகளில் திடீரென்று தோன்றி வீட்டிலுள்ள ஆணை வெளியே இழுத்துச் சென்று விடுவார்களாம். வீட்டிலிருந்து கதைக்கவென அழைத்துச் செல்லப்பட்ட அவர் தெருவில் பிணமாய் கிடப்பதை அதிகாலையில் எழும் ஓலம் ஊருக்குத் தெரிவிக்கும். அன்று அம்மா பள்ளிக்கூடம் போக விடமாட்டாள். எல்லோர் முகங்களிலும் சோகம் அப்பிக்கிடக்கும் பகலில் கூட வீட்டின் மூலைகள் பயம் தாங்கி நிற்கும்.
அந்த சோகமும் மௌனமும் பயமும் அன்புக்கு எதையோ உணர்த்தியிருக்கக்கூடும். ஏனெனில் அதன் பின்னர் நிசப்தமான இரவுகளில் ஊருக்குள் அந்த முகமூடி இளைஞர்கள் நுழைந்த போதெல்லாம் அன்பு மெதுவாக அழத் தொடங்குவான். படிப்படியாக அது ஓலமாகும். தெருவிற்கு ஓடி ஏதோ ஒரு திசையை உணர்ந்து அத்திசை நோக்கி நின்று ஓலமிட்டு ஓலமிட்டுக் களைத்து அவன் அனுங்கி அனுங்கிப் படுப்பான். மௌனமாகும் போதும் அவன் கண்களிலிருந்து நீர் வழியும். இத்தகைய இரவுகள் அதிகரிக்க அதிகரிக்க நாங்கள் இரவுகளை வெறுக்கத் தொடங்கினோம்.
இனிதே விடிந்த அன்றொரு நாளில் துப்பாக்கி முகவுரைகளோடும் இனிய முகமலர்ந்த நன்றியுரைகளோடும் கொடூர இரவுகள் சென்றொழிந்தன.
அமைதி காக்கவென அவர்கள் வந்தபோது அன்பு எங்களுக்குப் பெருந்துணையாகிப் போனான். தூரத்திலிருந்தே வந்து முகத்தில் மோதி அருவருப்பையும் அச்சத்தையம் தரும் கடலை எண்ணெயின் வாசனை எங்கள் மூக்குகளுக்கு இசைவாகிப் போனதாலோ என்னவோ காலஞ் செல்லச்செல்ல அவற்றை எங்களால் உணர முடியாமற் போனது. அந்த வாசனை வருவதை உணர்ந்தே ஒளிக்க வேண்டியவற்றை ஒளித்தும் அனுப்பி வைக்க வேண்டியவர்களைப் பாதுகாப்பாக அனுப்பியும் செயற்பட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு இது சிக்கலாகிப் போனதுணர்ந்து அன்பு கைகொடுத்தான்.
அன்புவின் எச்சரிக்கைக் குரலுணர்ந்து துரிதகதியில் செயற்பட்டும் பத்து நிமிடங்கள் கழிந்த பின்னரே அவர்கள் வருவார்கள்.
அமைதி போர்த்த அவர்கள் முகங்களின் பின்னே மறைந்து கிடந்த அவர்கள் வெறிக்கு எங்கள் இளம் பெண்கள் பலியாகத் தொடங்கியது அப்போதுதான்…. இரவோ…. பகலோ….. எங்கிருந்தோ எழும். ஒரு பெண்ணின் “ஐயோ!… அம்மா….” என்ற கதறலில் நாங்கள் உடல் விறைத்து நிமிரும் போது அன்புவும் உடல் விறைப்பான். பின்னர் இத்தகைய சம்பவங்கள் எங்களூரில் நடை “பெறாமற்போனதற்கு அன்பும் ஒரு காரணம். பகல்களில் “அவர்கள் வருகிறார்கள்” என்பது போல் அவன் எழுப்பும் ஒலி கேட்டு இளம் பெண்கள் கோயில்களை நோக்கியோடி மக்கள் கூட்டத்துடன் சேர்ந்திருந்து தம்மை மறைத்துக் கொள்வார்கள். இரவுகளிலோ அவனின் குரல்கேட்டு வளவளவாகப்
பாய்ந்துசென்று இருண்ட தோட்டத்து மூலைக் குடிசையில் ஒதுங்கிக் கொள்வார்கள்.
திரௌபதி மானத்தைக் காத்ததாகக் கூறப்படும் கிருஷ்ணன் உண்மையிலேயே இருந்திருந்தால் எங்கள் அன்பு போலவே இருந்திருக்கக் கூடும். அவன் போலவே அன்பும் எம்மூர்ப்பெண்களின் நேசத்திற்குரியவனானான்.
அன்பு போராளிகளின் நேசிப்புக்குரியவனானான் இரவுகளில் எங்கோ தொலைவில் ஒரு வெடிச்சத்தமோ குண்டுச் சத்தமோ கேட்கும் அம்மா மௌனமாக எழுந்து குசினிக்குள் போய் அடுப்பை மூட்டுவாள். அதுவே தனக்கு சமிக்ஞை போல விறைத்து நிமிர்ந்த காதுகளுடன் அன்பு வேலியோரம் போவான். அங்கும் இங்கும் பார்த்தபடி நிற்பான். படலையில் என்ன சத்தம் கேட்டடாலும் திடுக்கிடும் எங்களுக்கு இந்த வேளைகளில் வரும் அன்புவின் குழைந்த மெல்லிய அன்புக் குரலுடன் வரும் படலைச் சத்தம் மகிழ்ச்சியையே தரும். வாசற்படிவரை அவர்களோடு மெய்ப்பாதுகாவலனாய் வந்துவிட்டு மீண்டும் பேசாமல் படலையோடு அன்பு நிற்பான்.
சில வேளைகள் அச்சமும் பரபரப்புமாய் அன்பு ஒலியெழுப்புவது எங்களுக்குள்ளும் அச்சத்தையும் பரபரப்பையும் தரும். அப்பா வெளியில் சென்று அன்பு பார்க்கும் திசையைப் பார்ப்பார். அதன்பின்தான் போராளிகள் எத்திசையால் செல்வதென்பது தீர்மானிக்கப்படும். அந்த வேளைகளில் அன்பு ஒரு திசையறிகருவியாய் செயற்படுவான்.
அமைதிப் போர்வை போர்த்தியவர்கள் எங்கள் வீட்டில் சந்தேகங் கொண்டு திடீர் திடீரெனத் தேடுதல் நடத்தி ஏமாற்றம் கண்ட போதெல்லாம் அவர்களின் ஆத்திரம் அன்புவின் முதுகில் துப்பாக்கியடியால் விடியும். அன்பு அலறவே மாட்டான். அந்த நேரங்களில் அவனும் ஒரு தியாகியாய்…..
அதிகாலைச் சுற்றி வளைப்புகளில் அன்பு அதிக பரபரப்புடன் காணப்படுவான். அனைத்து வேலியோரமும் சுற்றிச்சுற்றி ஓடியோடிக்கத்துவான். வீட்டுக்குள் ஓடிவருவான். மீண்டும் உள்ளே வந்து அறைகளை எட்டிப்பார்ப்பான் வீட்டின்பின் வளவினூடு பற்றைகளைத் தாண்டியோடி யாரையோ எச்சரிக்கை செய்துவிட்டு மீண்டும் ஓடிவருவான். அவனது குரலடங்கி அவன் அமைதியாகும் கணம் தான் அவர்கள் வரும் கணம். அதுவரை எங்கள் ஒளிப்பு மறைப்பை ஊக்குவிக்கக் கத்திக் கொண்டேயிருப்பான்.
மீண்டும் இனிதொருகாலைப் பொழுதில் அவர்கள் அனைவரும் கப்பலேறிச் சென்றொழிந்த போது, வீட்டிற்கு வந்த வாகனங்கள் அனைத்தையும் சுற்றிச்சுற்றி வந்து தடவி முகர்ந்தே அவன் களைத்த போது, புன்னகை பொலிந்த எங்கள் முகங்களில் மேலும் சிரிப்பு
அப்போராளிகளின் மடியும் தோளும் அவன் குடியிருப்பாகிப் போனது.
இனிமையும் அமைதியும் கலந்த இவ் வசந்த கால வருடங்கள் கழிந்த பின் செல்மழை பொழிந்தவாறே இராணுவம் ஊரினுள் நுழைந்த இரண்டாவது இலையுதிர் காலத்தின் போது, ஊரோடு ஊராக இரவோடு இரவாக மக்களெல்லாம் வெளியேறினார்கள். அந்த இரவு மிகமிக நீண்டதாய் கொடியதாய்… கன்னங்களில் வழிந்த கண்ணீர், மழைத் தண்ணீரோடு கலந்து வெளியேறியது யாரறிவர்? கார்முகிலும் கனத்த சோகமும் இரவும் தந்த இருட்டில் எங்கள் முகவரிகளை நாங்கள் தொலைத்தோம்.
மரங்களின் கோயில் மண்டபங்களின் கீழும் கூரையைத்தேடி ஒதுங்கிய மக்களின் பயணம் தென்மராட்சியூடு தொடர்ந்த போது, கொட்டு மழையே கூரையாகிப் போனதே பலருக்கு இப்பயணம் வன்னியில்தான் முடிவுற்றது. வன்னி செல்ல எங்கள் மனங்கள் முனைந்து நின்றன. அன்புவோ வன்னி செல்வோர் முகங்களையே ஏக்கந் ததும்பப் பார்த்தபடி நிற்பான். நோயுற்ற அப்பப்பாவைக் கொண்டு செல்ல முடியாது தென்மராட்சியில் தங்கிய போது அதிகம் துன்பப்பட்டவன் அன்புதான். அவனது உற்ற தோழர்களையெல்லாம் நாங்கள் பிரிய நேரிட்டது.
முன்பொரு காலம் மாட்டுக் கொட்டிலாகக் கிடந்த அக்குடிலை தெரிந்தவரொருவர் தங்குவதற்காக தந்த போது, நாங்கள் ஆறுதலாக மூச்சுவிட்டோம். ஏனெனில் நான்கு புறமும் திறந்திருந்த அக் கொட்டிலுக்கு மேலே கூரையிருந்தது. மழையும் குளிரும் கூதல்காற்றும் அப்பப்பாவை மேலும் துன்புறுத்திய போது குளிரில் விறைத்த அவர் பாதங்களில் அன்பு ஏறிக்கிடப்பான். பாதங்களுக்கு சூடேற்றுவான். வீட்டை ஊரை உறவை பிரிந்த சோகம் அவன் முகத்திலும் உறைந்து கிடந்தது.
வன்னி செல்வதா? யாழ் செல்வதா? என நீண்ட மனப் போராட்டம் எங்களுக்குள் இடம்பெற்றபோது அன்பு வன்னி செல்வதிலேயே உறுதியாயிருந்தான். வன்னி செல்லும் மக்கள் கூட்டத்தை நோக்கி எங்களை இழுப்பான். அப்ப்பாவைக் கொண்டு செல்லவோ விட்டுவிட்டுச் செல்லவோ முடியாதென்பதை உணர்ந்து வீடு செல்ல நாங்கள் முடிவெடுத்தபோது அன்பு அழுத அழுகை…. இம்முறை அன்புவின் உள்ளுணர்விற்கெதிராக நாங்கள் முடிவெடுத்துக் கொண்டோம்.
மீண்டும் வீட்டுக்குச் சென்றபோது,
வாசற்படியே அன்புவின் வாசஸ்தலமானது. அவன் கண்களில் எச்சரிக்கை, எதையோ இழந்த ஏக்கம் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் தவிப்பு. இரவுகள் மீண்டும் கொடியதாய், நெடியதாய் ஆயின உணவும் தூக்கமும் குறைந்து அன்புவின் செயற்றிறன் குறையத் தொடங்கியது. சற்று முன்னர் அனைத்தும் அடங்கி ஏக்கங்கலந்த விழிகளைத் திறந்தபடியே அவன் உயிரடங்கிய போது.
“யார் இந்த அன்பு” என்று யாரும்கேட்டால் நாங்கள் மௌனிப்பது வழக்கம். ஏனெனில் அன்புவை நாயென்று சொல்ல எங்களில் யாருக்குமே பிடிக்காது. “உந்த நாயைப் பிடி தம்பி” என்று சொன்ன கந்தசாமி அண்ணையுடன் தம்பி பிடித்த சண்டையை வேடிக்கை பார்த்த ஊர் மறந்தும் கூட அன்புவை நாயென்றதில்லை.
அன்பு எங்கள் வீட்டிற்கு வந்த முதல் நாள் இன்றும் நினைத்தவுடன் என் கண் முன் வரும். தெருவழியே போன சொறி நாயைப் பிடித்துத் தரும்படி மூன்று வயதுத் தம்பி அடம் பிடித்து அழ, அம்மா அப்பாவை அதட்டினாள்.
“போங்கோ, ஓடுங்கோ அவன் மூச்சடங்கியெல்லே அழுகிறான். அங்கை துரையண்ணை வீட்டு நாய் ஒரு மாதத்துக்கு முதல் குட்டி போட்டதாம்” ஒரு குட்டியை வேண்டிக் கொண்டு வாங்கோ,என விரட்டினாள். “இவவோடை பெரிய கரைச்சல்” எனப் புறுபுறுத்தபடியே ஓய்வுநாள் அலுப்புடன் கிடந்த அப்பா சைக்கிளைத் தூக்கிக் கொண்டு போனார்.
எனக்குள் பரபரப்பும் பயங்களும் போட்டி போட்டன. “உது தம்பிக்கென்றால் என்னை விளையாட விடுவானோ? என்னைத் தொடவிடுவானோ? உவருக்குப் பெரிசா என்ன தெரியும்? குளிக்க வார்ப்பாரே? சாப்பாடு வைப்பாரே? நான் தான் எல்லாம் செய்ய வேணும் என்ற நினைவு நாய் எனக்குத்தான் என்ற பலத்தைத் தந்ததும் என்ன பெயர் வைக்கலாம்? என நான் யோசித்ததும் இன்றும் நன்றாய் நினைவிருக்கிறது.
“மூன்று வீடு தள்ளியிருக்கிற அன்புச் செல்வனை எனக்குப் பிடிக்காது. நாங்கள் எல்லோரும் ஸ்கூலுக்கு ஒன்றாத்தான் போறநாங்கள். போகேக்கையும் வரேக்கையும் தலையிலை குட்டுவான். ‘எலிவால்’ என்று சொல்லி என் தலைமயிரைப் பிடிச்சு இழுப்பான். அவனைக் கொல்ல வேணும்போல எனக்கு ஆத்திரம் வரும். ஆனா என்ரை வயநென்றாலும் அவன் குண்டன். அவனை ஒன்றும் செய்ய ஏலாது. அவனைப் பழிவாங்க ஒரேவழி, நாய்குட்டிக்கு ‘அன்பு’ என்றுதான் பெயர் வைக்கிறது” என்று பல எண்ணங்கள் என் சின்ன மனதில் ஓடின. ஆனால் வெறும் நாயென்று நினைத்த போது அன்புச் செல்வனை பழிவாங்கவென்று ‘அன்பு’ எனப்பெயர் வைத்த நான் சிந்திக்க ஆரம்பித்து அம்முரண்பாடும் உறுத்தத் தொடங்கிய போது, அன்பு எங்களில் ஒருவனாகியிருந்தான். அதே அன்பு அன்புச் செல்வனின் மேலும் ஏற்பட்டு அவன் என் பிரிய நிநேகிதனானான். ‘அன்பு’ எனும் என் சிறுவயதுப் பெயர் சூட்டலைக் கேட்டவன் இன்றும் சிரித்துக் கொள்வான்.
படலையைத் திறந்து அப்பா வருமுன்னரே “தம்பி! தம்பி! நாய்க்குட்டி” என்று கத்திக் கொண்டுதான் நான் ஓடியதும் அப்பா அன்புவை என்னட்டைத் தாங்கோ என்று நான் கத்தியதும் அப்பா என்னை விறோதமாய்ப் பார்த்ததும் இன்றும் ஈரம் காயாமல் என்னுள்.
“என்னப்பா! உம்மடை மகள் நாய் வரமுன்னமே பேர் வைச்சிட்டாள். அதுவும் அன்புவாம்” என்று சொல்லியபடி உள்ளே போக நானும் தம்பியும் பொத்திப் பொத்தி நாய்க்குட்டியை மூலைக்குள்ளை வளர்த்திப் போட்டு முன்னுக்குக் குந்தியிருந்தோம். மண்ணிறந்தில் புசுபுசுவென்று வட்டக் கண்களை உருட்டி உருட்டிப் பார்த்தபடி இருந்த அன்பு அன்றே எங்களில் ஒருவனானான்.
அம்மா முட்டை அவித்தால் அம்மா அன்புக்கு முட்டை என்றும் நாங்கள் ரெண்டு பேரும்படும் பாட்டைப் பார்த்து அம்மா எங்களுக்கென்று வாங்கும் தின்பண்டம் எல்லாவற்றையும் மூன்று பேருக்காய் வாங்கத் தொடங்கினாள்.
“இஞ்சை தம்பி உதை வீட்டுக்கை அடுக்காதை கூடொன்று கட்டி வெளியிலை விடு” என் அப்பப்பா அப்பாவிடம் சொன்ன போது நானும் தம்பியும் அழுத அழுகை. அழுது…. முரண்டு பிடித்து அன்று காலை தான் அப்பப்பா சொல்லித்தந்த “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்ற குறளை நான் அவரிடமே பதம் பார்த்து… எல்லோரும் சிரித்து… நினைவுகளின் சுமையினால் கண்ணீர் தானாகவே வழிந்தது.
அன்பு! எம்மினிய அன்பு! உன்தோழர்கள் வருவார்களே ! அன்பு எங்கே என்று உன்னைத் தேடுவார்களே! அதுவரையும் காத்திராமல் நீ சென்றதேன்? – கொடிய இரவுகளில் நீயொரு நம்பிக்கைக் கீற்றாய் இருந்தாய், இனி……….
தம்பியின் அறையில் அசைவு
தென்பட்டது. தம்பி எழும்பி வெளியே வந்தான். அன்புவின் அருகே அமர்ந்தான். “அப்பா” என மெல்ல அழைத்தான்.
திடுக்குற்றவராய் அப்பா “என்ன தம்பி?” என்றார். “அன்புவை விதைக்க வேணும்”
‘ஓமோம்”
“எங்கே விதைகுழி வெட்டலாம்”
“பின்னாலை தானே தம்பி தாக்க வேணும்” என்றார் அம்மம்மா.
“அம்மம்மா!” என்று அழுத்தத்துடன் அழைத்தான் தம்பி.
“தாக்க என்று சொல்லாதீங்கோ விதைக்க என்று சொல்லுங்கோ. மனிதர்களைப் போலவே அவனும் போராட்டத்திற்காக உழைத்தான், மரித்தான். அன்புவால் எங்கள் இளம் பெண்கள் எத்தனை பேரின் மானம் காப்பாற்றப்பட்டிருக்கும். அவனால் எத்தனை போராளிகள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். காயப்பட்டு பற்றைகளுள் பதுங்கி மயங்கிப் போன எத்தனை போராளிகளை அவன் எங்களுக்காகக் காட்டித் தந்திருப்பான். அவர்களுள் எத்தனை பேர் அன்று காப்பாற்றப்பட்டதால் இன்று பொறுப்பாளர்களாகவும் தளபதிகளாகவும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அவனை முன்பக்கம் தான் விதைப்பேன் நடுவேன் இதுதான் அன்புவின்ர தியாகத்துக்குச் செய்யும் மரியாதை நாளைக்கு அவனால் காப்பாற்றப்பட்ட போராளி மாமாக்கள் வந்து கேட்டால் காட்டவொரு கல்லறை வேணும், அது வெறும் கல்லறையா இருக்காது ஒரு சரித்திரமே அதற்குள்ளை இருக்கும்” பதின்மூன்று வயதிற்கேயுரிய விளக்கத்துடனும் ஆவேசத்துடனும் அவன் உரைத்த போது……
சம்மதத்திறகறிகுறியாய் நாங்கள் மௌனமானோம். எங்கள் அன்பு போல் எத்தனை அன்புகளின் பணி இந்தப் போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும். உண்மையிலேயே இராமர் அணைகட்ட அணில்கள் மண் கொட்டி உதவினவா என நானறியேன். ஆனால் அவ்வணில்களைப் போல் அன்புக்கள் சரித்திரத்தில் இடம் பெறுவார்களா? நிலைப்பார்களா? என்ற எண்ணம் என்மனதில் ஓடியது. தம்பி கூறிய அந்தச் சரித்திரம் எல்லோர் விழிகளிலும் கண்ணீர் வரச்செய்தது. கூடவே ஏக்கம்… தவிப்பு… எதிர்பார்ப்பு… மூலைகளிலிருந்து இருட்டை விரட்ட ஒளிக்கீற்றைச் சுமந்துவரும் சூரியக் கடவுளர்க்காய்….
-எரிமலை டிசம்பர் 2002
தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்


