
தமிழீழ மக்கள் சார்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் பிரான்சு நாட்டின் அதிகாரமிக்க மாநகரசபைக்கும் கடந்த 06.03.2026 வெள்ளிக்கிழமையன்று ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
மார்ச் மாதம் 6 ஆம் நாள் மாலை பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசின் புறநகரங்களில் ஒன்றான தமிழீழ மக்கள் அதிகம் வாழும் பொண்டி நகரத்தில் மாநகரசபையின் முதல்வர் இருப்பிடத்தில் மாநகரமுதல்வர் மற்றும் மாநகர பிரதிநிதிகளுடன் தமிழீழ மக்கள் சார்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, வரலாற்றுச்சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
ஒப்பந்தத்தின் விடயங்களாக:
- பொண்டி நகரத்தில் வாழும் தமிழீழ மக்களுடைய கலை, கலாசாரம், மொழி, அரசியல் என்பவற்றை உள்ளடக்கிய தமிழ்மக்கள் சார்ந்த விடயங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுடன் சேர்ந்து பணியாற்றுவது.
- தமிழர்களின் சமகால அரசியல் சிக்கல் சார்ந்த விழிப்புணர்வை உண்டாக்குவதற்கான உதவிகளைச் செய்தல்.
- மையமன்ற நகர ஒப்பந்தம் – பொண்டி நகராட்சிக்கும் தமிழர் தாயகத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகரத்தை பொறுப்பெடுக்கும் ஒப்பம் செய்யப்பட்டு பிரான்சு மக்களுக்கும், தமிழீழ மக்களுக்குமான ஓர் உறவுப்பாலமாக இருத்தல். இவ் ஒப்பந்தம் அன்றைய நாளில் கைச்சாத்திடப்பட்டது.
இதனால் தமிழீழ தேசத்தின் மக்கள் அமைப்பாக பிரதிநிதிப்படுத்தும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் கீழ் பணிசெய்யும் 15 வரையிலான கட்டமைப்புகளும், அதனைத் தங்கள் கைகளிலும், தோள்களிலும் தாங்கிநிற்கும் தமிழீழ மக்கள், பிரான்சு நாட்டின் உச்சத்தில் பணியாற்றும் எம் தேசத்தின் பிள்ளைகள், மாணவ, மாணவியர்கள், உயர் கல்வி, தொழிலாளர்கள், எமது தேசத்தின் முதுகெலும்பான வர்த்தகர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட, கிடைத்திருக்கும் அங்கீகாரமாகவே பார்க்கப்படுகின்றது. (இதனையே இக்கைச்சாத்தின் பின்னர் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.)
மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு மனிதநேயப் பணிகளில் தேசமக்களுக்காக பணியாற்றியவர்கள் சிங்கள தேசத்தின் பொய்யான பரப்புரைகளை நம்பிய சர்வதேசம், தமிழ்மக்களின் இழந்து போன உரிமைக்கான அரசியல், ஆயுதவழிப்போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக்கி அதற்கு உதவிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் பலரையும் கைதுசெய்து சிறையிலடைத்து அவமானப்படுத்தியது. நீதிகேட்டு நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியது இந்த உலகம்.
பிரான்சு தேசத்திலும் இந்தக் கைதுகள் இவ்வாறு நடைபெற்றது. பல்வேறு துயரத்தைச் சுமந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கிஞ்சித்தும் அதிலிருந்து பின்வாங்காது தனது தேசப்பணியில் பல்வேறு இடர்பாடுகள், நெருக்கடிகளை உயிர் ஆபத்துக்களையும் கடந்து நின்றதால் இன்று பிரான்சு அரசின் அதிகாரமிக்க கட்டமைப்புடன் இந்த ஒப்பந்தம் முதற்தடவையாக செய்யப்பட்டதானது, பிரான்சு நாட்டில் வாழும் தமிழீழ மக்களின் வரலாற்றுப் பதிவில் ஒன்றாகவே அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகின்றது. இதேபோன்று இதன் தொடர்ச்சியாக ஏனைய மாநகரங்களில் வாழும் தமிழீழ மக்கள் இந்த வரலாற்றுப்பதிவை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியல்துறையுடன் இணைந்து முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது.
அத்துடன், தேசப்பற்றோடு வளர்ந்துவரும் எமது அடுத்த தலைமுறைக்கும், அவர்களை பெற்றெடுத்த தேசத்தின் நினைவுகளுடன் வாழும் பெற்றோர்களுக்கும், பத்து மாதங்கள் தன்வயிற்றில் சுமந்து தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை, தம்மைவிடத் தங்கள் தாய்நாடே சிறந்ததென உவந்தளித்த பெற்றோர்களுக்கும், உடன்பிறந்தோருக்கும் தமது பிள்ளைகளின் உயிர்ஈகம் என்னும் விடுதலைத்தீ ஒருநாளும் வீணாகிப்போகாது, அணைந்துபோகாது அடுத்து வரும் தலைமுறையையும் பற்றி இலக்கை அடையும் பயணிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு விடயமாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
சிங்கள பௌத்த தேசமானது, தனது இலங்கை தேசத்தில் மட்டுமல்ல கடல்கடந்தும் தமிழீழ மக்களுக்கெதிரான தனது அகலக்காலைப் பதித்தே வைத்திருக்கின்றது. தேசவிடுதலை உணர்வும் அர்ப்பணிப்பு மிக்க எமது மக்களின் ஒன்றுபட்ட சக்தியும், மான மாவீரர்களின் வழிகாட்டலும் இருக்கும்வரை காலங்கள் எடுத்தாலும் எமது இலக்கான தமிழீழ தனியரசை அடைய சர்வதேச தமிழர்கள் நாம் உறுதிபூண்டு சத்தியத்தின், தர்மத்தின், அறத்தின் வழியில் தொடர்ந்தும் பயணிப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நிர்வாகம் – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு .


