
பிரான்ஸ் வாழும் எங்கள் அன்பு உறவுகளே…! 08.03.2026
எமது அன்பு சகோதரிகளே இன்று மார்ச் 8 உலக மகளிர் நாள்.
பெண்களின் உரிமை, கண்ணியம், சமத்துவம் இவை வெறும் சொற்களாக அல்லாமல், உலகம் முழுவதும் வாழும் பெண்களின் வாழ்க்கையில் உண்மையாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று நினைவூட்டும் முக்கியமான நாள் இது.
இந்த ஆண்டிற்கான உலக மகளிர் நாள் கருப்பொருள்: “அனைத்துப் பெண்களுக்கும், அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் உரிமை, நீதி, செயற்பாடு சுiபாவள. துரளவiஉந. யுஉவழைn. குழச யுடுடு றுழஅநn யனெ புசைடள. உரிமையைப் பற்றி பேசுவதோடு மட்டும் அல்ல, நீதியை கோருவதோடு மட்டும் அல்ல அவற்றை நடைமுறையில் செயற்படுத்த வேண்டும் என்பதே இந்த ஆண்டின் உலக அழைப்பு.
அந்த உலகக் குரலோடு ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த ஈழத் தமிழ்ப் பெண்களாகிய நாமும் இன்று நம் குரலை இணைக்கிறோம். பல தசாப்தங்களாக ஏதிலிகளாகப் புலம்பெயர்ந்து பல நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், எங்கள் மனங்களில் மாறாத உணர்வாக வாழ்வது எங்கள் மண், எங்கள் அடையாளம், எங்கள் சுதந்திரமான வாழ்வின் கனவு. நாம் இழப்புகளையும், பிரிவுகளையும் ஏராளமாகக் கண்டுள்ளோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளை இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறோம். பல குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை என்னவென்று கூட இன்றுவரை அறியாமல் வாழ்ந்து வருகின்றன. போரின் கொடூரத்தை நினைவூட்டும் மனிதப் புதைகுழிகளும் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களும் மனிதாபிமானத்தைக் கேள்விக்குள்ளாக்கும் துயரமான உண்மைகளாக இன்னும் நிற்கின்றன. முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனவழிப்பு என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும். எம் போராட்டங்களுக்கும் இன்னும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.
அன்பு சகோதரிகளே போர் ஓய்ந்ததாக அறிவிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் கடந்திருந்தாலும், எங்கள் தாயகமான ஈழத்தில் வாழும் எங்கள் உறவுகளின் வாழ்வியல் இன்னும் பல சவால்களால் நிரம்பியுள்ளது. பல குடும்பங்கள் வருமானமின்றி போராடுகின்றன. பல வீடுகள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டு நிற்கின்றன. அடிப்படை வசதிகள் அனைவருக்கும் சமமாக கிடைக்கவில்லை. சமூகத்தில் பாகுபாடுகளும் தடைகளும் இன்னும் தொடர்கின்றன. இதோடு மட்டும் அல்லாமல் நமது இளைய தலைமுறையை பாதிக்கும் போதைப் பொருள் பாவனை போன்ற பிரச்சினைகளும் கவலைக்கிடமாக உயர்ந்து வருகின்றன. இந்த உண்மைகள் நமக்கு வலியைத் தருகின்றன. ஆனால், அதேநேரத்தில் ஒரு முக்கியமான பொறுப்பையும் நமக்கு நினைவூட்டுகின்றன நாம் எங்கே வாழ்ந்தாலும் எங்கள் மக்களையும் எங்கள் சமூகத்தையும் மறக்கக் கூடாது என்ற பொறுப்பு.
இன்று உலகம் முழுவதும் போர்களும் மோதல்களும் மனித வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கின்றன. போர் எங்கு நடந்தாலும் அதன் மிகப் பெரிய விலையை செலுத்துவது பெண்களும் குழந்தைகளும்தான். இந்த உண்மைகளையும் இன்றைய உலக மகளிர் நாளில் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
அன்புச் சகோதரிகளே!
இன்று இந்த பிரான்சு மண்ணில், நாம் சுதந்திரமாகக் கல்வி கற்கிறோம், வேலை செய்கிறோம்.
குமுகாயத்தில் பங்கெடுக்கிறோம். அதே நேரத்தில் எங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், தமிழ் கலைகளையும், எங்கள் வரலாற்றையும் கற்றுக் கொடுத்துவருகிறோம். இன்று நடைபெறும் “வன்னிமயில் விருது – 2026” தாயக விடுதலைப் பாடலுக்கான இந்த நடனப் போட்டி ஒரு கலை நிகழ்ச்சி மட்டுமல்ல. இது நம்மை நாம் அடையாளப்படுத்தும் ஒரு மேடை. நடனம் என்பது உடலின் அசைவு மட்டும் அல்ல. அது உள்ளத்தின் மொழி. ஒரு தலைமுறை அனுபவித்த வரலாற்றை அடுத்த தலைமுறை கலை வழியாக வெளிப்படுத்தும் அற்புதமான தருணம் இது. “விடுதலை” என்ற சொல் ஓர் அரசியல் சொல் மட்டும் அல்ல. அது மனிதனின் அடிப்படைச் சுதந்திரத்தின் சொல், மனித கண்ணியத்தின் சொல். தன் அடையாளத்தோடு, தன் மொழியோடு, தன் மண்ணோடு வாழும் உரிமையின் சொல். எங்கள் பிள்ளைகள் இந்த மேடையில் நடனம் ஆடும்போது அவர்கள் வெறும் அசைவுகளை மட்டும் காட்டவில்லை. அவர்கள் ஒரு மக்களின் நினைவையும் ஒரு தலைமுறையின் கனவையும் ஒரு வரலாற்றின் குரலையும் கலைவடிவில் வெளிப்படுத்துகிறார்கள். அந்தச் செய்தி தெளிவானது. “நாங்கள் எங்கள் உரிமையை மறக்கவில்லை. எங்கள் குரல் அமைதியாகவில்லை.” நாம் வாழும் பிரான்ஸ் நாட்டின் அடிப்படைப் பண்புகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மதிப்புகள் எங்கள் ஈழத் தாயகக் கனவுகளோடும் ஒலித்துச் சங்கமிக்கின்றன.
அன்புச் சகோதரிகளே!
எங்கள் குரல் மென்மையானது ஆனால் அது உறுதியானது. எங்கள் பாதை அமைதியானது. ஆனால் அது நம்பிக்கையால் நிரம்பியது. எங்கள் வரலாறு எங்களை உடைக்கவில்லை. அது எங்களை மேலும் உறுதியாக மாற்றியுள்ளது. அதனால்தான் இன்றுநாம் ஒரு உறுதியோடு நிற்கிறோம். உரிமையை மறக்கமாட்டோம். நீதியை விட்டுக்கொடுக்கமாட்டோம். நம்பிக்கையை இழக்கமாட்டோம். உரிமையுடன், நீதியுடன், நம்பிக்கையுடன் நாம் அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம்.
“ பெண்கள் விழிப்புற்று எழுச்சி கொண்டு தமதுசொந்த விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராட முன்வரும் போதுதான் அந்தப்போராட்டம் ஒரு தேசியப் போராட்டமாக முழுவடிவத்தைப் பெறும்’’ என்ற எங்கள் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக நாம் அனைவரும் பயணிப்போம்.
“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றி!
அனைவருக்கும் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துக்கள்
தமிழ்ப்பெண்கள் அமைப்பு – பிரான்சு.


