பிரான்சில் 78 மாவட்டம் றொம்புயே நகரத்தில் இடம்பெற்ற தமிழர் மகிழ்விழா!

0
315

பிரான்சில் 78 மாவட்டம் றொம்புயே நகரத்தில் வாழும் தமிழீழ மக்களால் நடாத்தப்பட்ட தமிழர் மகிழ்விழா
றொம்புய்யே பிராங்கோ தமிழ்ச்சங்கம், தமிழ்ச்சோலை குழந்தைகளுடன் 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை றொம்புயே என்னும் நகரத்தில் காலை 11.00 மணிக்கு அங்கு வாழும் தமிழீழ மக்களால் கொண்டாப்பட்டது. காலை மண்டபவாயிலில் உள்ள வரவேற்பு ஒளி மூத்தவர்களால் ஏற்றிவைக்கப்பட்டு குழந்தைகள் பெரியவர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மண்டபத்தில் தாய்மண்ணுக்கும் அதன் சுதந்திர விடுதலைக்காகவும் உயிர் ஈந்த மாவீரர்களுக்காக அவர்களின் நினைவாக வைக்கப்பட்டிருந்த பொதுப்படத்திற்கு அங்கு வாழும் இரண்டு மாவீரர்களின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க, மாவீரரின் சகோதரி அவர்கள் பொதுப்படத்திற்கு மலர் வணக்கம் செய்து வைத்து அகவணக்கம் செலுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரெஞ்சுப் பிரமுகர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு. மேத்தா, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. நாகயோதிசுவரன், தமிழச்சங்கக் கூட்டமைப்பின் துணைப்பொறுப்பாளர் திருமதி. மாயா மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிதிப்பொறுப் பாளர் திரு.செவ்வேள், தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுநர் போட்டிகளின் முகாமையாளர் திரு. இராஜலிங்கம், திறாப் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. மகிந்தன், நிர்வாகி திரு. சேத்திரபாலன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து மாணவி ஒருவர் மாவீரர் புகழ்பாடும் வணக்க நடனத்தையும், தொடர்ந்து மாணவர் திருக்குறளினை ஒப்புவிக்க தேவாரத்துடன் தமிழர் பொங்கலினை வந்திருந்த மூத்த தமிழ் குடும்பத்தினர் பொங்கல் பானையில் பால் இட்டு தொடங்கியிருந்தனர்.
தொடர்ந்து மாணவர்களின் தமிழ்ப்பேச்சு, தேசியத்தலைவர் பற்றிய உரை, தமிழ்மொழி பற்றிய உரைகள் பாடல்கள் நடனங்கள் இடம் பெற்றன.

நிகழ்வில் சிறப்புரை, ஆசியுரைகள், மதிப்புரைகள் போன்றன இடம்பெற்றன. ஆசியுரையை தமிழ்ச்சோலையின் தலைமைப் பணியகத்தின் பொறுப்பாளர் திரு. நாகயோதீசுவரன் ஆற்றியிருந்தார். ,றம்புயே பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் இடைவிடாத முயற்சி மொழிமீதான ஆர்வம் இன்று 3 ஆவது ஆண்டில் இவ்வளவு மக்களுடன் சிறப்பானதொரு நிகழ்வைச் செய்வது பெருமையைத் தருகின்றது என்றும் தொடர்ந்து தமிழ்ச்சோலையின் செயற்பாட்டிற்கு தமிழ்ச்சோலைத் தலைமையப்பணியகம் பெரும் பலமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் ஆற்றியிருந்தார். பாரிசிலும், அதன் புறநகர் பகுதியிலுமே வாழும் லட்சம் வரையிலான தமிழ்மக்கள் தமது மொழியையும், கலைபண்பாட்டையும் போற்றுவதோடு அதனை பேணிப் பாதுகாப்பதும், அடுத்த தலைமுறைக்கும் அதனை கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகின்றமை தமிழினத்திற் ஒரு பேறாக பார்க்கும் நாம் அதற்கு மேலாக பாரிசின் புறநகர் பகுதியைக் கடந்து 78 மாவட்டத்தில் வாழும் எமது மக்கள் இவ்வாறானதொரு நிகழ்வை தமது மூத்த, இளைய, பிஞ்சுத்தலைமுறையுடன் கூடி நின்று தமிழர் மகிழ்விழா எடுப்பதும் செய்வதும் எமது இனத்திற்கு பலம் தரும் ஒரு நிகழ்வாகவே பார்க்க வேண்டும். நிகழ்வுகள் தேசியத்தோடும் அதன் உணர்வோடும் பயணிப்பதை கண்டு பெருமை கொள்வதாகவும் வரப்போகும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக தமது தமிழ்ப்பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மெய்வல்லுநர் போட்டியின் முகாமையாளர் திரு. இராஜலிங்கம் அவர்கள் தனது மதிப்புரையில் இன்று காலை முதல் மதியம் வரை நடைபெறும் நிகழ்வை பார்த்ததையும் அதனை மண்ணோடும், மொழியோடு, பண்பாட்டுடனும் இங்கும் அயல் கிராமங்களில் வாழும் அனைவரையும் அரவணைத்து தமிழோடு பயணிப்பதும் அதனை ஏற்பாடுகள் செய்து உழைத்து வரும் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. சுதன் அவர்களையும் அவரின் சங்க உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவரையும் பாராட்டியிருந்தார்..
விருந்தோம்பல் நிகழ்வாக மதிய உணவு பொங்கல் முதற்கொண்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை நிகழ்வாக தண்ணுமை ( மிருதங்கம்) ஆசிரியர் கலைமாமணி திரு. சேயோன் அவர்களின் மாணவர்கள் தமது தண்ணுமை கற்றலை மக்கள் மத்தியில் வாசித்துக்காட்டி மக்களின் பலத்த பாராட்டுக்களைப் பெற்றிருந்தனர்.

மதிப்புரையை வழங்கிய ஆசிரியர் திறாப் தமிழ்ச்சோலை நிர்வாகி ஆசிரியர் சேத்திரபாலன் அவர்கள் தாய் மொழியின் அவசியம், கற்றலின் தேவை நடைமுறை சிக்கல்கள், எம்மவர்களின் நிலைப்பாடுகள் பற்றி ஆழமான தெளிவான காத்திரமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். கலந்து கொண்ட பிரமுகர்கள் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் மதிப்பளிப்புச் செய்யப்பட்டடிருந்தனர்.
இந்நிகழ்வில் முத்தாய்ப்பான நிகழ்வாக இந்த நகருக்கு 30 மற்றும் 40 வருடங்களுக்கு முன்பாக வந்த பெரியோர்கள் குடும்பங்கள் துணைவன் துணைவியர் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் அவர்கள் பற்றிய தெரிவித்தல் இன்றுவரை அவர்கள், தாமும் தமது பிள்ளைகளும், பேரன் பேத்தி பிள்ளைகளோடு வாழ்வதும் உரையாற்றி பெரியவர் அடக்க முடியாத அழுகையுடன், தமது பிள்ளைகளை மொழியோடும், தமிழ்பற்றோடும், பண்பாட்டுடனும் வளர்த்திருக்கின்றேன் என்றும் பெருமைபடக் கூறியிருந்தார். இவ்வாறு அங்கு வாழும் நான்கு குடும்பத்தினர் மதிப்பளிக்கப்பட்டனர். தமிழுடன் வாழ்ந்த எம்மவர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியத்தின் செயற்பாடுகளில் இதுவும் அமைந்திருந்ததுடன் பெருமைதரும் நிகழ்வாக அமைந்திருந்தது. மாலைவரை தமிழர் மகிழ்விழா சிறப்பாக நடைபெற்றிருந்தது. மண்டபம் நிறைந்த குழந்தைகள், இளையவர்கள் பெரியவர்கள் என பலநூறு மக்கள் கலந்து கொண்டு சிறப்படையச்செய்திருந்தனர் . (ஊடகப்பிரிவு – எரிமலை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here