
அன்பான பிரான்சுவாழ் தமிழீழ மக்களே உங்களுக்கு எமது புரட்சிகரமான வணக்கங்களும், ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களும்.
பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு, எமது தேசத்தின் விடுதலைக்கும் சுதந்திரமான சுபீட்சமான நல்வாழ்வுக்கும் பலமாக இருக்கட்டும். அதற்கு எம் உயிரிலும் மேலான மாவீரர்களும், அவர்களுக்கு துணைநின்ற எமது மக்களும் பலம் கொடுக்கட்டும். எம்மினத்திற்காக உன்னதமான உயிர்களைத்தந்த ஆயுத விடுதலைப் போராட்டம் அமைதியாக்கப்பட்டு இன்று 16 வருடங்களைத் தொட்டபோதும், இக்களத்தின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக இனவாதந்தான் தொடர்ந்தும் நீடித்து நிலைக்குமானால் அந்த இனவாதந்தான் தமிழீழ தனியரசு பிறப்பதற்கான புறநிலையை அமைத்துக் கொடுக்கும். தமிழீழத் தனியரசு உதயமாவது தவிர்க்க முடியாத வரலாற்று நியதியென்றால், எந்தவொரு சக்தியாலும் அதனைத் தடுத்துவிட முடியாது. என்றோ ஒருநாள் தமிழீழத் தனிநாடு பிறந்து அது எம்மின மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
ஓர் உண்மையின் வருகையும் அதன் தன்மையைப் புரிந்து கொள்ள காலதாமதமாகிய 16 ஆண்டுகளும் சர்வதேசமும் இலங்கையின் அயல் நாடுகளும் இயற்கையின் பெரும் இடர்களையும் புரிந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த புரிந்துணர்வுகள் யாவிலும் ஏதோவொரு சுயநலமும், அரசியலும் அடங்கியிருப்பதையே தமிழர்கள் நாம் உணர்ந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இந்தவேளையில் புலம் பெயர்ந்து தாய்மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் மண்ணின் நினைவுகளை மனதில் தாங்கி கண்ணீருடன் வாழ்வை நடாத்தும் தமிழீழ மக்கள் தம் தாயக மக்களுக்கு தம்மாலான அனைத்து வழிகளிலுமான பங்களிப்பைச் செய்து கொண்டே வருகின்றனர். அவர்களுக்கு எமது இதயத்தால் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பேரிடரில் சிக்குண்ட மக்களுக்கு சிறப்பு உதவிகள் என்று எமது தாய்நாடாகக் கருதும் இந்திய தேசமும் அதற்கு நாம் ஒன்று பின்போனவர்கள் அல்ல என்று சீன தேசமும் செய்யும் உதவிகள் இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதைச் சிங்கள பேரினவாதிகளே சொல்லி வருகின்ற வேளை, புதிதாக கையேற்றிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ளபோதும். இந்த அரசு, மக்களுக்குக் கொடுத்த வாக்கு உறுதி மொழிகள் எதையுமே நிறைவேற்றாமல் காலாகாலமாக 77 ஆண்டுகள் சிங்கள பௌத்த பேரினவாதம் செய்ததையே செய்து வருகின்றது.
தமிழர்களுக்கு ஏதிராகவும் மறைமுகமாகவும் அவர்களின் அரசியல் சனநாயக ரீதியிலான உரிமைப் போராட்டத்தையும் அதனை அடியோடு இல்லாமல் செய்வதிலும் கடந்த காலத்தைவிட பயங்கரமானதாகக் கருதப்படும் புதிய பயங்கரவாதச் சட்டத்தை உருவாக்கியுள்ளனரேயொழிய, இனப்படுகொலைக்கான நீதி, உயிருடன் அரச இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட வர்களுக்கான பொறுப்புக்கூறல் நீதி, சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அப்பாவித் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிகள், வீடுகள் எதற்கும் நீதியின்றித் தமிழர் பாரம்பரிய நிலங்களில் பௌத்த கோயில்களைத் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் நிறுவுதல், காவியுடை தரித்தவர்களும், காக்கியுடை அணிந்தவர்களும் தமிழ் மக்கள் மீது காட்டும் காட்டுமிராண்டித்தனம், அடாவடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுவும், கொடிய போதைப் பொருட்களை தமிழர்கள் பகுதியில் பாவனைக்குவிட்டும், அதனைக்கண்டும் காணாது இருப்பதுவும், தினம் தினம் சாவுகளையும், தமிழினப் படுகொலைக்கும் தமிழர் சாவுக்கும் காரணமானவர்களைத் தமது சரித்திரத்தில் இடம்பிடிக்கும் செயற்பாடுகளிலே ஈடுபட்டு வருகின்றது. இதற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மௌனிப்பே.
நல்ல நோக்கோடு என்றும் வராத அயல்நாடுகள் இன்று இலங்கை தேசம் முழுவதும் வரிசைகட்டி வந்து நிற்பதும். எம்மவர்கள் கூடக் காலம் கடந்து காட்சிமாற்றமாக கடல்கடந்து சந்திப்புகளை நடாத்தச் சென்றிருப்பதுவும் காலத்தின் மாற்றமே என்பதை உணர்த்துகின்றன.
தமிழ் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் சிங்கள பௌத்த பேரினவாதிகள், ஆட்சியாளர்கள் மிகவும் நுட்பமாகத் தமது காய்நகர்த்தலைச் செய்துவருகின்றனர்.
இதனை எம் உயிரிலும் மேலான தமிழீழ மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். விழிப்புடன் பயணப்படவேண்டும். மண்ணின் விடுதலைக்கான ஆயுதப்போராட்ட காலத்தில் ஏற்படாத சோதனைகளும் , வேதனைகளும் வெடிச்சத்தமும் குண்டுச்சத்தமும் இந்தக் காலத்திலே எமது மக்கள் அதிகம் சந்திக்கின்றனர். எமது இந்த போராட்ட கால வாழ்வில் அதிகமாக யாரை நம்புகின்றோமோ அவர்கள்தான் நாம் நம்பமுடியாத அளவுக்கு வலிகளையும் வேதனைகளையும் தருகின்றார்கள். காரணம் அதுதான் எமது விதி என்பதையே இன்றைய காலம் எமக்கு உணர்த்திநிற்கின்றது.
எம் அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! இளையோர்களே!
2026 மிகப்பெரும் பலம் எமது கைகளில் உள்ளது. அந்தப் பலம் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கும், தமிழீழ மண்ணில் வாழும் எமது மக்களின் அபிலாசைகளுக்கும் நிச்சயம் பேரம் பேசும் ஒரு சக்தியாக இருக்கின்றது . அதுதான் எங்களது தேர்தல் வாக்குப்பலமாகும். இதனை நாம் எமக்கு வலிமையாக்குவோம். அதனைப் பெற்றுக் கொள்ள என்றுமே எம்மை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள் இன்று எம்மோடு பயணிக்க வரிசைகட்டி நிற்கின்றனர். அதனை எப்படி? யாருக்கு என்று தீர்மானிப்போம் அரசியலில் பங்கெடுப்போம். பங்கெடுக்கும் எம்மவர்களின் கரங்களைப் பலப்படுத்துவோம்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.



