
இலங்கை முழுவதையும் பாதித்த சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தொடர்ச்சியாகச் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அதன்படி , அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையின்படி, அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல்போனோரின் எண்ணிக்கை 352 ஆகப் பதிவாகியுள்ளது.

அனர்த்தங்களால் கண்டி (88 பேர்), பதுளை (82 பேர்), நுவரெலியா (75 பேர்), குருநாகல் (52 பேர் ), மாத்தளை (24 பேர் ), கேகாலை (22 பேர்) ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை, அனர்த்தங்களால் கண்டி (150 பேர்), நுவரெலியா (62 பேர்), பதுளை (48 பேர்), கேகாலை (48 பேர்), குருநாகல் (27 பேர்) ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் காணாமல்போனோர் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், மொத்தமாக 3 இலட்சத்துக்கு 82 ஆயிரத்து 651 குடும்பங்களைச் சேர்ந்த 13 இலட்சத்து 73 ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 57 ஆயிரத்து 790 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 4 ஆயிரத்து 597 பேர் ஆயிரத்து 368 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அனர்த்தங்களால் 432 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 688 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
(நன்றி: முரசு)


