
ஈழ விடுதலைக்காகத் தன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, நேற்று மாலை (நவம்பர் 21, வெள்ளி) யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்றது.

கோப்பாய் துயிலுமில்லம் காணப்பட்ட நிலப்பரப்பில் தற்போது இராணுவ முகாம் அமைந்துள்ள நிலையில், அதன் வாயிலின் முன்னால் பொதுமக்கள் ஒன்றுகூடி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, துயிலுமில்லத்தின் தற்போதைய கல்லறை அமைந்துள்ள இடத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

நிகழ்வின் பிரதானமான ஈகைச் சுடரை, மாவீரர்கள் இருவரின் தாயார் ஒருவரே ஏற்றி வைத்தார். தனது பிள்ளைகளையும் எண்ணற்ற தியாகங்களையும் நெஞ்சில் சுமந்து அவர் சுடரை ஏற்றியபோது, அங்கிருந்த மக்கள் பலரும் கண்ணீர் மல்கினர்.

இறுதியாக, விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய நினைவுப் பெயர்ப் பலகைகள்மக்களின் அஞ்சலி செலுத்தும் பாவனைக்காக உணர்வுபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.
குறித்த பகுதியில் மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமையும் நினைவேந்தல் இடம்பெற்றது.


