“தமிழ்க் குழந்தை” மௌனித்து இன்று ஒரு வருடம் நிறைவு! (16.11.2024)

0
81
“தமிழ்” என்றால் “குழந்தை” ஆசிரியர்!குழந்தை” ஆசிரியர் என்றால் “தமிழ்!

தமிழ்ப் பாடத்தைக் கலகலப்பாகக் கற்பிப்பதில் அவருக்கு நிகர் அவரே தான்!

கலைப்பிரிவு மாணவர்களுக்கு மாத்திரமன்றிக் கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கும் தமிழ் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியவர் #குழந்தை சேர்.

அதாகப்பட்டது, அயற் கல்வி நிலையங்களிற் கற்கும் கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களும் குழந்தை ஆசிரியரின் வகுப்புக்குத் தவறாமல் வந்துவிடுவார்கள்!
தமிழ் படிக்கவா என்றால் இல்லை குழந்தை ஆசிரியரின் நகைச்சுவைத் தமிழைக் கேட்க..!

அவ்வளவு கலகலப்பு! அவர் வகுப்பின்
மகிழ்ச்சியான அந்த மணித்துளிகள் கடந்து போகும். மனவேகத்திலும் வேகமாக…!

வகுப்பு நிறைவடைந்து விட்டாலும்… முக்கிய கட்டத்தில் “தொடரும்…” என நிறுத்தப்படும் சின்னத்திரை நாடகம் போல “அடுத்த வகுப்பு எப்ப?” என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் அவர் வகுப்புகள்!

குழந்தை ஆசிரியரின் நகைச்சுவை கலந்த இலக்கணமாகட்டும், இலக்கியமாகட்டும் கொப்பியிலே எழுதிப் படிக்காமலே மாணவர் மனங்களிற் பதிந்து விடும்படி எடுத்து விளக்கும் அவர் திறனுக்கு நிகரேதுமில்லை!

இரட்டை அர்த்தம் பொதிந்த மற்றவர் மனம் புண்படாத நகைச்சுவைகள் அவ்வப்போது குறுங்கதைகள்…

“அடே, கீரிமலைக் கேணியில கழுதை மயிர் பிடுங்கிக் குளிச்ச கதை தெரியுந்தானே!” என்பார் எல்லா மாணவர்களும் “சொல்லுங்க சேர்” என்றவுடன் கதை தொடரும்…

நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றினாலும் தமிழ் கற்பிப்பதில் தனித் திறமை அவருக்கு தமது பாடசாலை ஆசிரியர்களை விடக் குழந்தை ஆசிரியரையே மாணவர்கள் அதிகமாக நேசிக்க அவரது நகைச்சுவை உணர்வோடு கலந்த கற்பித்தலே ஏதெனலாம்.

உயர்தரக் கலைப்பிரிவு என்றாலே பக்கம் பக்கமாக பாடக் குறிப்புகளைக் கையில் வைத்துக் கொண்டு சொல்லச் சொல்ல எழுத வைக்கும் ஆசிரியர்கள் மத்தியில் மனதிற் பதிந்த பாடத்தை அப்படியே பாட்டுப்போல சொல்லி மாணவர்கள் மனங்கொள்ள வைத்த எங்கள் ஆசான் குழந்தை அவர்கள், அமுத விழாக் கண்டு அகமகிழ்ந்து வாழ்வது குறித்து முகநூலில் Sivabalasundran Ambalavanar ஐயாவின் பதிவொன்று கண்டேன். உளம் மகிழ்ந்தோம்.

தனது மகவொன்றை தமிழ்தேசியத்திற்காக கொடை வழங்கிய தமிழ்த்தேசியப்பற்றாளர்.

குழந்தை ஆசிரியரின் இழப்பு ஈழத்தமிழருக்கும் தமிழுக்கும் பேரிழப்பு. அவரின் வெற்றிடத்தை எவராலும் நிரப்ப முடியாது. பெயரைப்போலவே குழந்தை மனதை கொண்ட குழந்தைவேலு ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here