
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் மக்களின் போக்குவரத்துக்கு பாரிய இடையூறாக காணப்பட்ட சிறிலங்கா விமான படையினரால் அமைக்கப்பட்டிருந்த பாரிய தூண்கள் கரைதுறைபற்று பிரதேச சபையினரால் இடித்து அகற்றப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவு கிராம அலுவலர் பிரிவின் பிலவுக்குடியிருப்பு கிராமமானது சிறிலங்கா விமான படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் ஒரு மாதமாக மக்கள் வீதியில் இறங்கி போராடி மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறிலங்கா விமானப்படையினரின் பாவனையில் இருந்தபோது இந்த கிராமத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்ட இரண்டு பாரிய தூண்கள் மக்களது போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுவதாக கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து
நேற்றைய தினம்(30) கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் கனரக வாகனங்களைக் கொண்டு குறித்த போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இரண்டு தூண்களும் அகற்றப்பட்டன..


