
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள, உலகின்புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் இன்று காலை ஒரு துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘மூன்று அல்லது நான்கு’ பேர் கொண்ட கும்பல், ‘ஏழே நிமிடங்களில்’ மதிப்பிட முடியாத பாரம்பரிய மதிப்பு கொண்ட நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பியோடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலைச் சுமார் 9:30 மணியளவில், அருங்காட்சியகம் திறக்கப்படுவதற்கு சற்று முன்னர் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள் மிகவும் நூதனமான முறையில், கட்டிடத்தின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பாரவூர்தியில் இருந்த மின்தூக்கியைப் (nacelle) பயன்படுத்தி, அருங்காட்சியகத்தின் புகழ்பெற்ற ‘அப்பல்லோ கூடத்திற்குள்’ (Galerie d’Apollon) நேரடியாக நுழைந்துள்ளனர்.
உள்ளே நுழைந்த அவர்கள், இரண்டு கண்ணாடிப் பேழைகளை மட்டும் குறிவைத்து, அதில் இருந்த பழங்கால நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். இந்த மொத்த சம்பவத்தையும் வெறும் ஏழு நிமிடங்களில் முடித்துவிட்டு, ஸ்கூட்டர்களில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்சின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பணத்தால் மதிப்பிட முடியாதவை; அவை நமது நாட்டின் முக்கியமான பாரம்பரியச் சின்னங்கள். இது ஒரு மிகப்பெரிய இழப்பு. கொள்ளையர்கள் மிகவும் திட்டமிட்டு இச்செயலைச் செய்துள்ளனர்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த கலாச்சார அமைச்சர் ரஷீதா தாதி, “இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது மட்டுமே ஆறுதலான விடயம்” என்று கூறினார்.
இந்தக் கொள்ளை தொடர்பாக, திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபட்ட கும்பல்மீது பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை, பாரிஸ் காவல்துறையின் கொள்ளைத் தடுப்புப் பிரிவான BRB (Brigade de répression du banditisme) மற்றும் கலாச்சாரப் பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் சிறப்புப் பிரிவான OCBC (Office central de lutte contre le trafic des biens culturels) ஆகியவை இணைந்து விசாரித்து வருகின்றன. கொள்ளையர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய ஸ்கூட்டர் ஒன்று பின்னர் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, லூவர் அருங்காட்சியகம் ‘சிறப்பு காரணங்களுக்காக’ இன்று முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை, பாரிஸ் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


