
பிரான்ஸில் அதிபர் மக்ரோனால் கடந்த மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட
செபஸ்ரியன் லுகோர்னு- எதிர்க்கட்சிகளது ஆதரவைத் திரட்டுவதில் தோல்விகண்ட நிலையில்- நேற்று திடீரெனத் தனது பதவியை இராஜினாமாச் செய்திருக்கிறார்.
26 தினங்கள் மாத்திரமே பதவியில் நீடித்த அவர் நாடாளுமன்றக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைத் திரட்டுவதில் தான் தோல்விகண்டதை ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு பிரதமராகத் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படவில்லை என்று தனது பதவிவிலகலுக்குக் காரணம் தெரிவித்திருக்கிறார்.
லுகோர்னு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலைதான் தனது அமைச்சரவை விவரத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அவரது புதிய அமைச்சரவை பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் பிரான்சுவா பைரூவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அத்தனை பழைய முகங்களையும் அப்படியே உள்வாங்கியிருந்தது. அதனால சீற்றமடைந்த எதிர்க்கட்சிகள் “புதிய மொந்தையில் பழைய கள்ளு” என்று அதை விமர்சித்தன. தோற்றுப்போனவர்களது மீள் பிரவேசத்தை அனுமதியோம் என்று கூறிய அந்தக் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் நம்பிக்கையில்லா பிரேரணையைக் காட்டி பிரதமரை எச்சரிக்கத் தொடங்கின.
இந்த நிலையிலேயே
செபஸ்ரியன் லுகோர்னு நேற்றுக் காலை அதிபர் மக்ரோனைச் சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேச்சு நடத்தினார். அதன் பிறகே பின்னர் அவரது பதவி விலகல் பற்றிய செய்தியை எலிஸே மாளிகை அறிவித்தது.
மக்ரோனின் நெருங்கிய சகாவாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் விளங்கியவர் லுகோர்னு.
முன்னாள் பிரதமர் பிரான்சுவா பைரூ தனது வரவு-செலவுத் திட்டத்துக்கு எம்பிக்களது ஆதரவைத் திரட்ட முடியாமற் போனாதால் தோற்கடிக்கப்பட்டவேளை
அவரது இடத்துக்குப் புதிய பிரதமராக லுகோர்னுவை மக்ரோன் நியமித்திருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்தாவது பிரதமர் அவராவார்.
ஆகப் பிந்திய பிரதமராக வந்தவர் மிகக் குறுகிய நாட்களில் எடுத்த
எதிர்பாராத இந்த முடிவு நாட்டின் அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் நீடித்து வருகின்ற ஸ்திரமற்ற அரசியல் நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறது.
எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தலை அறிவிக்குமாறு கோஷமிட்டு வருகின்றன. அதிபர் மக்ரோன் பதவி விலக வேண்டும் என்ற குரல்களும் மீண்டும் எழும்பியுள்ளன.
ஆனால் செபஸ்ரியன் லுகோர்னுவின் பதவி விலகலை மக்ரோன் ஏற்றுக்கொண்டாரா என்பது இன்னமும் உறுதியாகவில்லை. அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் இறுதிக்கட்ட முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபடுமாறு அவர் பிரதமரைக் கேட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
நன்றி: தாஸ்நியூஸ் – பாரிஸ்
06-10-2025


