
தமிழியல் இளங்கலைமாணி மூன்றாவது பட்டமளிப்பு விழா கடந்த 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Savigny le Temple நகரிலுள்ள Millenium அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காலை முதலாம் அமர்வாக தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கும் மதியத்திற்குப் பின் இரண்டாம் அமர்வாக பட்டமளிப்பு விழாவும் இடம்பெற்றது.
‘மண்ணும் மக்களும்’ என்னும் கருப்பொருளில் ஒலிக்க இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் தியாகதீபம் ஆய்வுநூல் உட்பட மூன்று நூல்கள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இரு பட்டமளிப்பு விழாவிலும் மொத்தமாக 62 பட்டகர்கள் பட்டம் பெற்றுள்ள நிலையில் இம்முறை 40 பேர் பட்டமளிக்கப்பட்டனர். புலம்பெயர் நாடொன்றில் தமிழ்மொழியில் நூறு வரையானவர்கள் பட்டம் பெற்றமை இதுவே வரலாற்றில் முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வரங்கின் தொடக்கத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கினை முதன்மை விருந்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டது. வரவேற்பு நடனம் சிறப்பாக இருந்தது. தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கு தொடங்கியது. இவ்வாய்வரங்கில் ஐந்து ஆய்வுக்கட்டுரைகள் சிறப்பாக பலரின் சாட்சியக் காணொளிகள், ஒளிப்படங்களுடன் ஒப்பளிக்கப்பட்டமை அனைவரையும் கவர்ந்திருந்தது. ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்ற இவ்வாய்வரங்கில் ஆய்வு நூலானது தமிழ் , பிரெஞ்சு , ஆங்கிலம் என மும்மொழிகளிலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
மேலும், இளம் பட்டக எழுத்தாளர்களால் எழுதப்பட்ட விதைப்பு – 2 எனும் சிறுகதைத் தொகுப்பும் ஆதிலட்சுமி சிவகுமாரால் எழுதப்பட்ட முட்காட்டுப் பூ என்னும் புதினமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
குறித்த நூல்களை முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட பலரும் பெற்றுச் சிறப்பித்திருந்தனர்
வெர்சைல் தமிழ்ச்சோலை மாணவர்களின் பறை இசை தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றியிருந்ததுடன் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
வழமை போன்று இடைவேளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவூட்டும் முகமாக சிரட்டையில் அனைவருக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கஞ்சியை பருகியதைத் காணமுடிந்தது.
இரண்டாம் அமர்வான பட்டமளிப்பு விழாவில் 40 பேர் பட்டமளிக்கப்பட்டனர். பட்டங்களை இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த அறிவியலாளர் முனைவர் சிதம்பரநாதம் சபேசன் அவர்கள் வழங்க பதக்கங்களை தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த முனைவர் முத்துச்செல்வன் அவர்கள் அணிவித்தார்.
தமிழர்களின் மண்சார்ந்த பாரம்பரிய பொருட்கள் மற்றும் நூல்கள் அனைவரையும் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
நிகழ்வில் இறுதி நிகழ்வாக வளர்தமிழ் 12 இனை நிறைவுசெய்த மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக மதிப்பளிக்கப்பட்டனர்.
குறித்த மாணவர்களின் முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.
இந்நிகழ்வுகளை இளந்தலைமுறையினர் மிகவும் நேர்த்தியான முறையில் ஒருங்கமைத்துப் பணிகளை ஆற்றிக்கொண்டிருந்ததை புலம்பெயர் மண்ணில் தமிழர்பெருங்குடியின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைத் தந்தது
நிறைவாக நன்றி உரைக்கப்பட்டது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் குறித்த நிகழ்வு இனிதே நிறைவுற்றது.








































