உறவுகளின் ஆடைகள் பேசும்; செம்மணி புதைகுழித் தடயங்கள் மக்கள்! பார்வைக்கு

0
133

ஆழமான சோகத்திற்கும், கொடிய நம்பிக்கைக்கும் மத்தியில் உறவுகளைத் தேடும் குடும்பங்கள்

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பிள்ளைகளையும், உறவுகளையும் தேடி அலையும் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் நீண்டகாலக் காத்திருப்பின் மீது, ஒரு துயரம் தோய்ந்த வெளிச்சக்கீற்று பாயவிருக்கிறது. செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட, ஒரு காலத்தின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் புத்தகப்பைகள், ஆடைகள் மற்றும் பிற தனிப்பட்ட உடமைகள், வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

இது ஒரு கண்காட்சி அல்ல; இது, இனவழிப்பு செய்யப்பட்ட,காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொரு உயிரின் கதையையும் சொல்லக் காத்திருக்கும் உறைந்துபோன நிமிடங்கள்.

அடையாளம் காணப்பட்ட 122 ஆவது எலும்புக்கூடு

செம்மணி புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27வது நாளான இன்றும், சோகம் தோய்ந்த அமைதிக்கு மத்தியில் பணிகள் தொடர்ந்தன. நேற்றும் புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்றுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளதாக சட்டத்தரணி வி. நிரஞ்சன் தெரிவித்தார். இவற்றில், 112 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சட்டத்தரணி மேலும் தெரிவிக்கையில், “அகழ்ந்தெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் தடயப்பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, இந்த உயிரற்ற சாட்சியங்கள் மக்களின் முன் வைக்கப்படும்,” என்றார்.

ஒரு புத்தகப்பையும், சட்டையும் சொல்லும் ஆயிரம் கதைகள்

செவ்வாயன்று பார்வைக்கு வைக்கப்படப்போவது வெறும் பொருட்கள் அல்ல. அவை, ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீர்க் கதைகள்.

ஒரு தாய்க்கு, அது தன் மகனின் கடைசிப் பிறந்தநாளுக்கு அவள் ஆசையாக எடுத்துக் கொடுத்த சட்டையாக இருக்கலாம். ஒரு தந்தைக்கு, அது தன் மகள் தினமும் சுமந்து சென்ற, கனவுகள் நிறைந்த புத்தகப் பையாக இருக்கலாம். ஒரு சகோதரிக்கு, அது தன் அண்ணன் கடைசியாக அணிந்து சென்ற ஆடையாக இருக்கலாம். ஒவ்வொரு தடயமும், சிதைந்துபோன ஒரு குடும்பத்தின் நினைவுகளைச் சுமந்து நிற்கிறது.

“என் மகனின் சட்டையா இது?” என்ற நடுக்கத்துடனும், “என் பிள்ளையின் தடையமாவது கிடைக்காதா?” என்ற ஏங்கலுடனும், உறவுகள் அந்தப் பொருட்களைப் பார்க்க வரும் காட்சி, மனித மனசாட்சியை உலுக்கப் போதுமானது.

இந்த உயிரற்ற சாட்சியங்கள், பல ஆண்டுகளாக வாய் திறக்க மறுக்கப்பட்ட உண்மைகளை உலகுக்கு உரக்கச் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை, தமக்குரியவர்களின் கதையை மட்டும் சொல்லவில்லை; தங்களைப் போலவே காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் நீதிக்கான குரலாகவும் ஒலிக்கக் காத்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here