
உதிக்கும் திசை நோக்கி புலத்தில் இருந்து உன்னத பயணம்…1
–கதிரவன்-
இன்று செம்மணி புதைகுழி விவகாரம் வரை சிங்களத்தின் தமிழின அழிப்பின் கோரமுகம் வெளி உலகிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலைஒருபுறம், இதற்கென தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் போராட்டங்கள் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றமை ஒருபுறம்…..

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஆரம்ப காலங்களில் புலம்பெயர் தேசங்களில் புலம்பெயர் தமிழ்மக்களை ஒருங்கிணைப்பதற்காக பல கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றின் ஊடாகவே அனைத்து விடயங்களும் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன ; இன்றுவரை முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.
ஆனால், குறித்த கட்டமைப்புக்களில் இணைந்து பணியாற்றிய சிலர் பதவிப் போட்டிகள், தம்மை மக்கள் முன் பிரபல்யப்படுத்தும் நோக்கோடு, வழமைக்கு மாறாக தாய்க்கட்டமைப்பைப் புறக்கணித்து தலைமையின் கொள்கைகளுக்கு முரணாக புதிய அமைப்புகளை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதற்குத் தேசியத்தின் பெயர்களை, இலச்சினை களை, தமிழீழ தேசியத்தின் முக்கிய அடையாளங்களை அனுமதி இன்றிப் பயன்படுத்தி, சிறுபிள்ளைத்தனமாக நிகழ்வுகளை தாய்க்கட்டமைப்புக்களுக்கு எதிராக நடாத்தி மக்களைக் குழப்பும் விசமத்தனமான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
இவ்வாறான புல்லுருவிகள் பிரமாண்டமான தாய்க்கட்டமைப்புக்களால் நடாத்தப்படும் நிகழ்வுகளைக் குழப்பி போட்டி நிகழ்வுகளை நடாத்துகின்றனர்.
இன்றைய பல ஊடகங்கள் இவ்வாறான வர்களின் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றமை வேதனை அளிக்கின்ற விடயம்.
ஊடகவியலாளர், ஊடகம் என்ற பதங்களுக்கு முதலில் வருவோம். ஊடகம் என்பது நடுநிலையாக நின்று செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி செய்திகளை வெளியிடவேண்டும். இதனைத்தான் திருவள்ளுவர் “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிறார்.
எந்த ஒரு விடயத்தையும் நாம் அறியும்போது அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதன்பின்னர் அதனை வெளிவிடுவதே சிறந்தது.
ஆனால், ஒரு செய்தியை எழுதும்போது ஊடகவியலாளர் அதனை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்னரே மக்கள் முன் வெளியிடவேண்டும். அவ்வாறு தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எம் தேசத்துக்கும் தேசியத்துக்கும் முன் தேசத் துரோகிகளே…அவ்வாறான முரண்பாடான அமைப்புக்களை உருவாக்குபவர்களும் அதற்குத் துணை போகின்றவர்களும் எந்தப்பிரிவில் வைக்கப்படுவார்கள் என்பதை சிறுபிள்ளைகள் கூட இலகுவாகக் கூறிவிடுவார்கள்.
இன்று 27.07.2025 ஞாயிற்றுக்கிழமை யாழில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று இவ்வாறான குழப்பவாதிகளின் தேசியத்தலைவர் மற்றும் துவாரகா தொடர்பான தகவல்களுக்கு எதிராக கட்டுரை வெளியிட்டுள்ளது.. ஆனால், குறித்த ஊடகம் இவ்வாறான வர்கள் நிகழ்த்திய தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களுக்குப்போட்டியான நிகழ்வுகளை புகைப்படங்களுடன் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசியத்தலைவரை அண்மையில் சந்தித்ததாகக் கூறி தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் கூட்டம் ஒருபுறம், அதனை மறுதலித்து தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தியே தீருவோம் என சமூக இணையங்களில் வாய்ச்சவாடல் விட்டுக்கொண்டிருக்கும் கும்பல் மறுபுறம்.
இவற்றை மறுதலித்து அண்மையில் தேசியக்கட்டமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே.
இவற்றுக்கு மத்தியில் தமிழ்த்தேசியக் கட்டமைப்புக்களின் இன்றைய பயணம் என்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவையாகவே உள்ளன.
இன்று முகநூலில் செயற்பாட்டாளர் ஒருவர் விடுத்த செய்திக்குறிப்பு ஒன்றை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.
Swiss இல் இப்போது தவிபு என்ற சொல்லாடலின் மீது தடை இல்லை. தேசியக்கொடிக்கும் தடை இல்லை. ஆனால் மீளத் தடைவிதிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக சட்டவாளர் ஒருவரூடாக அறிகிறேன்.
அண்மைக் காலமாக இரண்டு, மூன்று குழுக்களாக பிரிந்நு நிற்பதோடு மட்டுமன்றி, எல்லாக்குழுக்களும் தலைவரின் படத்தையும் ஒரே தேசியக்கொடியையும் வைத்துக்கொண்டு குழுமோதல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாலும், இது Swiss நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் என எண்ணுவதாலும், மீளவும் தடைசெய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அறிகிறேன்.
மென்டிஸ் அவர்களும் இன்னும் பலரும் இணைந்து மிகவும் கடினப்பட்டு 2014 இல் உடைத்த வழக்கையும் அதன்பயனையும், நீர்த்துப்போகச் செய்ய எதிரியானவன் எடுத்த முயற்சிக்கு உடந்தையாகி, நான்கு ஐந்து குழுக்களாக நின்று மோதி, தமிழரைப் பாதாளத்தில் தள்ள முயற்சிக்கும் அனைத்துக் “காவாலிகளுக்கும்” தடைவரும்போது எதிரியானவன் பெரும் விருந்தளிப்பான்.
இதுவே அந்தக் குறிப்பு.
தாம் தவறான பாதையில் செல்கின்றோம் என்பது அவர்களுக்கே தெரிந்திருந்தும் அதனை நியாயப்படுத்தும் விதமாக அவர்களின் பேச்சுக்கள் இருப்பதே வேதனை.
இவ்வாறான அமைப்புகளில் இணைந்திருப்பவர்கள் தமிழ்த்தேசியக் கட்டமைப்புக்கள் இல் இருந்து முரண்பாடுகளை உருவாக்கி வெளியேறியவர்கள் அல்லது அமைப்புகளின் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதால் வெளியேற்றப்பட்டவர்களாகவே உள்ளமை வருந்தத்தக்கது.
இதிலிருந்து தெரிகிறது இவர்கள் யார்? யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் புரிந்துவிடும்.
இவர்களுடைய கருத்துக்கள் “தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள்” என்பதாகவே அமைகின்றது.
இவ்வாறானவர்கள் குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் இருந்து உங்களை நோக்கி வரும் அமைப்புக்களை இனங்கண்டு தமிழீழத் தேசியத் தலைமை காட்டிய வழியில் இலக்குகளை எட்டும் வரை உதிக்கும் திசைநோக்கி உன்னத மாகப் பயணிப்போம்.
இது சிந்திக்கும் நேரமல்ல சிந்தித்து செயற்படும் நேரம்…
(பயணம் தொடரும்… )


