
தமிழின அழிப்பின் துயரமான நினைவுகளைச் சுமந்து, ஆயிரக்கணக்கான மக்கள் பிரித்தானியா பாராளுமன்ற சதுக்கத்தில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின்போது, தமிழின அழிப்பைப் பறைசாற்றும் ஆவணப் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் மற்றும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டிருந்த தமிழர்கள், சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, ‘கறுப்பு யூலை ‘ என்று அழைக்கப்படும் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அரச வன்முறைகளின் 42 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
நிகழ்வில் பேசிய தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர் ஒருவர், “நாம் இழந்த உறவுகளை மௌனத்தால் அல்ல, ஒரு நோக்கத்துடனேயே நினைவுகூருகிறோம். அவர்களின் நினைவுகள் எமக்கு வழிகாட்டட்டும், எம்மை வலிமைப்படுத்தட்டும், தமிழர்களின் போராட்டம் தொடர்கிறது என்பதை இந்த உலகிற்கு நினைவூட்டட்டும்” என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.
பாரளுமன்ற சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் காட்சிக்கூடம், 1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் முகங்கொடுத்த வன்முறைச் சுழற்சிகளையும், தமிழர் தாயகத்தில் தொடரும் சிங்கள மயமாக்கலையும் ஆவணப்படுத்தி இருந்தது.இது கூடியிருந்த மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பல தசாப்தங்களாகத் தொடரும் தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி கோரியும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து புலம்பெயர் தமிழ் சமூகத்தை ஒன்றுதிரட்டி, நினைவேந்தல் நிகழ்வுகளையும் போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வுகள், தமிழர்களின் துயரத்தை உலகிற்கு எடுத்துரைக்கவும், நீதிக்கான பயணத்தைத் தொடரவும் வழிவகுக்கின்றது











