
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து 12 ஆவது ஆண்டாக நடாத்திய தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் போட்டி 2025 மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு 450 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுப்போட்டி, இம்முறை 1195 மாணவர்களுடன் மூன்று தினங்கள் இடம்பெற்றிருந்தது.
தெரிவும் போட்டிகள் கடந்த 28.06.2025 மற்றும் 29.06.2025 (சனி,ஞாயிறு) ஆகிய இரு தினங்கள் வித்றி பகுதியில் நடைபெற்ற நிலையில் கடந்த 12.07.2025 சனிக்கிழமை சார்சல் நகரத்தில் அமைந்துள்ள Centre Sportif Nelson Mandela மைதானத்தில் இறுதிப்போட்டிகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. சார்சல் நெல்சன்மண்டேலா மைதானப்பகுதியில் அமைந்துள்ள மாவீரர் லெப். சங்கர் நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு ஆரம்ப வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து முழவு (பான்ட்) வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடரினை சார்சல் தமிழ்ச்சங்க பொறுப்பாளர் திரு.டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

தமிழீழ தேசியக்கொடியை தமிழ்ச்சோலை தலைமைப் பணியக முன்னாள் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சு தேசக் கொடியை செல்வன் நிதீபன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகக் கொடியை அதன் பொறுப்பாளர் திரு.நாகயோதீஸ்வரன் அவர்களும் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புக்கொடியை அதன் பொறுப்பாளர் திரு. பாலக்குமாரன் அவர்களும் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து சமநேரத்தில் 6 இல்லங்களுக்கான கொடிகளையும் இல்லங்களின் பொறுப்பாளர்கள் ஏற்றிவைத்தனர். ஒலிப்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு மெய்வல்லுநர் போட்டித் தலைவன், தலைவியிடம் கையளிக்க அவர்கள் வீரர்களோடு மைதானத்தை வலம் வந்து இந்த ஆண்டுக்கான மெய்வல்லுநர் போட்டித் தலைவன் மற்றும் மெய்வல்லுநர் தலைவி ஆகியோரிடம் ஒலிம்பிக் தீபத்தை ஒப்படைக்க அவர்கள் ஒலிம்பிக் சுடரினை ஏற்றிவைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
தொடர்ந்து நடுவர்களுக்கான சத்தியப் பிரமாணத்தைத் தொடர்ந்து போட்டிகள் இனிதே ஆரம்பமாகின. சோதியா இல்லம் (சிவப்பு), அங்கையற்கண்ணி இல்லம் (நீலம்), ராதா இல்லம் (மஞ்சள்), மாலதி இல்லம் (செம்மஞ்சள்), சார்ள்ஸ் இல்லம் (பச்சை), ஜெயந்தன் இல்லம் (ஊதா)ஆகிய இல்லங்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன. தமிழ்ச்சோலை இல்ல மாணவர்களின் அணிநடை அணிவகுப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அணிவகுப்பு மரியாதையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.பார்த்தீபன், தமிழ்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.நாகயோதீஸ்வரன், மெய்வல்லுநர் போட்டி துணைமுகாமையாளர் திரு.பீலிக்ஸ், ,தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன், கார்ஜ் சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
வினோத உடைப்போட்டி இம்முறையும் சிறப்பாக அமைந்திருந்தது. ஆறு இல்லங்களும் வினோத உடைப்போட்டிகளை .திறம்பட அமைத்திருந்தன.
போட்டிகளின் நிறைவில் மூன்று தினங்களும் நடுவர்களாகக் நடுநிலையோடு கடமைபுரிந்த நடுவர்கள் மைதானத்தின் நடுவே மதிப்பளிக்கப்பட்டனர்.
அத்தோடு சிறார்களுக்கான விளையாட்டுக்கள் என்பனவும் சிறப்பாக அமைந்திருந்தன. குழந்தைகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு மகிழ்வோடு தமது இனிப்புப் பொதிகளை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கான பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
முடிவில் சார்ள்ஸ் இல்லம் முதலிடத்தையும் ராதா இல்லம் இரண்டாமிடத்தையும் சோதியா இல்லம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன.

நிறைவாக வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கான மற்றும் இல்லங்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.
கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.








































