தேசியத் தலைவரைப் புரிந்தவர் என்றும் தடுமாறுவதில்லை; தடமோ எண்ணமோ என்றும் மாறுவதில்லை!

0
507

பேரன்பிற்குரிய பிரான்சுவாழ் தமிழீழ மக்களே!

தேசியத்தலைவரைப் புரிந்தவர் என்றும் தடுமாறுவதில்லை! தமிழ்த்தாயின் வலி உணர்ந்தவர் தடமோ எண்ணமோ என்றும் மாறுவதில்லை!!

தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வை நடாத்தி, அவரை இறைவனாக்கி, வரலாற்று அத்தியாயம் ஒன்றை மூடி, அவர் ஏற்றிவைத்த தமிழீழத் தேசிய ஆன்மாவை அணைத்துவிட எம்மவரைத் தூண்டுவதும், இதற்குச் சமாந்தரமாக மறுமுனையில் அவர் குறித்த போலிகளை உருவாக்கி எம்மிடையே சஞ்சலங்களை ஏற்படுத்துவதும் வெளிச்சக்திகள் ஈழத்தமிழர்களுக்குள் ஊடுருவிச் செய்யும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளே அன்றி வேறொன்றுமல்ல.

இவற்றுக்குத் தெரிந்தோ தெரியாமலோ பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் உடந்தையாகவேண்டாம்.

புறநானூற்றுச் சங்க காலத்துக்கும் அதற்கும் பின்னான சோழர் காலத்துக்கும் பின்னர் நெடுங்காலமாக ‘இதற்காகத்தான் காத்திருந்தோம்’ என்பது போல் காத்திருந்த தமிழர்களிடையே ‘வாராது வந்த மாமணியாக’ வரலாற்றுப் பிறப்பெடுத்து ஈழத் தமிழர்களின் இன உணர்வைச் சரியாக நெறிப்படுத்தி, அதைத் தனக்கும் அப்பால் சந்ததி சந்ததியாகப் பற்றிப் பரவச் செய்தவரும், உலகளாவிய தமிழர்களுக்குக் காலம் தந்த கைவிளக்காக விளங்குபவரும் எமது தேசியத் தலைவர் ஆவார்.

சாதாரணமனித வாழ்நாள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் அவர்.

அவ்வாறான தேசியத் தலைவரின் இருப்புப் பற்றிய கேள்விகளுக்கு அப்பால் தேசிய ஆன்மாவாக என்றும் விளங்கும் அவர் சரீர இறப்புக்கு அப்பாற்பட்டவர். மேற்குறித்த புரிதல் எமது மக்களிடம் ஆழமான ஒரு மனநிலையாகப் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.

ஆனால், இந்த மனநிலையையும் இது சார்ந்த கருத்தியலையும் உடைக்க முற்படும் வெளிச்சக்திகள் ஒரு காலத்தில் அவரை உயிராக மதித்து நடந்த முன்னாள் போராளிகளிற் சிலரையும் செயற்பாட்டாளர்களிற் சிலரையும் காலப்போக்கில் தமது தேவைக்குத் திட்டமிட்டுப் பலியாக்கிப் பயன்படுத்துகின்றன.

அதேவேளை, இவர்களை வைத்து மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளின் ஆழமான பின்புலத்தை அறியாமல் தவறான எண்ணம் இல்லாதவர்களும் உணர்ச்சிவயப்பட்டு உள்ளீர்க்கப்பட்டுப் பலியாகிவிடும் இடர் நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பலியாகுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த வேண்டுகோள் அறிக்கை வெளியிடப்படுகிறது.

தேசியத் தலைவருக்கு எம்மவரே குறைமுதிர்ச்சியாக நினைவேந்தல் செய்வது என்பது அவரை நினைவாக்கி, அவர் தொடர்பாக எமக்கிருக்கும் வரலாற்றுக் கடனை மடைமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் சதி முயற்சியாகும். தொடர்ந்தும் எமக்கிடையே பிளவுகளை உருவாக்கி, கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தும் உள்நோக்கமும் இதற்கு உண்டு.

முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரின் பின் 16 ஆண்டுகள் கடந்தும் அணையாது தொடரும் இனவெழுச்சியை மழுங்கடித்து, அதைத் திசைமாற்றி, மடைமாற்றம் செய்யும் சதிச் செயற்பாடுகளை சிங்கள பௌத்த பேரினவாத அரசும், அதற்குத் தொடர்ந்தும் முண்டுகொடுத்து வருகின்ற, குறிப்பாகத் தத்தமது கேந்திரநலன்களை மையப்படுத்தி, தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீடித்துவரும் பிராந்திய, சர்வதேச அரச தரப்புகள் சிலவும் இவற்றின் உளவுப் பிரிவுகளும் இச்சக்திகளோடு பின்னிப்பிணைந்துள்ள தன்னார்வ வலைப்பின்னல்களும் இடைவிடாது அரங்கேற்றி வருகின்றன.

தாயகத்தில் இன அழிப்புப் போரின் இறுதிக் காலம் வரை நீடித்த எமது தேசத்தின் நிழல் அரசையும், அது சார்ந்த புலம்பெயர் கட்டுமானங்களையும் சீர்குலைப்பதற்கு பல உத்திகளை மேற்குறித்த தரப்புகள் கட்டவிழ்த்து வருகின்றன. ஒட்டுமொத்த ஓர் இனத்தின் ஈகம் தொடர்பான நீர்த்துப்போதல்களை எம்மவர்களைக் கொண்டே செய்து விடவேண்டும் என்ற தற்சிதைவு அரசியலையும் எம்மவரிடையே இவை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கோ, அல்லது தேசியத் தலைவரின் இருப்புப் பற்றிய ஆதாரமோ நம்பகத்தன்மையோ எதுவுமற்ற போலித்தனமான முன்னெடுப்புகளுக்கோ எழுந்தமானமாகப் பலியாகாமல் தமிழீழ இலக்கு நோக்கிய பயணத்தில் அடுத்தடுத்த மைற்கற்களை தேசியத் தலைவர் தந்துள்ள வழிநடாத்தலில் காலத்துக்கேற்ற போராட்ட வடிவ மாற்றங்களோடு உறுதியாக முன்னெடுக்க எம்மோடு தொடர்ந்து இணைந்திருக்குமாறு அனைவரின் கரங்களையும் இறுகப் பற்றியவாறு இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

எம் தேசியத்தலைவரின் பார்வையும், ஆசியும் என்றும் எம்மை வழிநடத்தும். அதனையே தேசியத் தலைவர் மீது அன்பும், பற்றும் கொணட் பல்லோபலட்சம் மக்கள் விரும்புகின்றார்கள். நாமும் பின் பற்றுகின்றோம்.

தலைவனைப் புரிந்தவர் என்றும் தடுமாறுவதில்லை. தமிழ்த்தாயின் வலி உணர்ந்தவர் தடமோ எண்ணமோ என்றும் தடுமாறுவதில்லை!

இதையே இன்றைய காலம் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

பிரான்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here