
பிரான்சு மண்ணில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஒத்துழைப்புடன் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு நடாத்தும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2025 இற்கான எழுத்துத் தேர்வு கடந்த (07-06-2025) சனிக்கிழமை பிரான்சு பாரிஸ் நகருக்கு அண்மையில் உள்ள அரச தேர்வு மண்டபத்தில் நடைபெற்ற அதேவேளை, வெளிமாகாணங்களிலுள்ள Nice, Beausoleil, Strasbourg, Mulhouse, Gien, Toulouse, Rennes, Tours, Lyon, Bordeaux, Nevers, Bordeaux Grand Parc, Chalette-sur-Loing நகரங்களிலுள்ள தேர்வு நிலையங்களிலும் இத்தேர்வு நடைபெற்றது. இந்நகரங்களில் 325 மாணவர்கள் தோற்றினர்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால், இத்தேர்வானது புலன்மொழிவளத் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகிய இரு பகுதிகளைக் கொண்டது. புலன்மொழிவளத் தேர்வு கடந்த மே மாதம் 03, 04, 11 ஆகிய நாட்களில் நடாத்திமுடிக்கப்பட்டுள்ளது.


இத்தேர்வானது இல்-து-பிரான்சில் (Île-de-France) லாபிளாஸ் (Laplace) நகரிருள்ள அரச தேர்வு மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதில் 5393 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் 2002 ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டுவரும் இப்பொதுத்தேர்வு இம்முறையுடன் 24 ஆண்டுகளை நிறைவுசெய்கின்றது. இத்தேர்வானது 2005 இலிருந்து லாபிளாஸ் அரச தேர்வு மண்டபத்தில் நடைபெறத் தொடங்கியது.
இத்தேர்வானது வளர்தமிழ்-01 தொடக்கம் வளர்தமிழ்-12 வரையான வகுப்புகளுக்கு நடாத்தப்படுகின்றது.

இத்தேர்வில் பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கும் 66 தமிழ்ச்சோலைகளின் மாணவர்களும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் தேர்வில் இணைந்து கொள்ளும் 5 தனியார் பள்ளிகளின் மாணவர்களும் தனித்தேர்வர்களுமாக மொத்தம் 5718 மாணவர்கள் இத்தேர்வில் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, பாலர் நிலைத் தேர்வு கடந்த 14.06.2025 சனிக்கிழமை பிரான்சில் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.
அடுத்த கல்வி ஆண்டில் வளர்தமிழ் 1 இல் புதிதாக இணைந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான அச்சத்தைப் போக்குவதற்காகவே இத்தேர்வு நடத்தப்படுவதாகவும் –
இம்முறை பிரான்சில் பாரிஸ், இல்துபிரான்ஸ் மற்றும் வெளி மாகாணங்கள் உட்பட 703 மாணவர்கள் பாலர் நிலைத் தேர்வு எழுதினர் எனத் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.


