
பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்களுக்கு
மாமனிதர் மதிப்பளிப்பு
தமிழீழ மண்ணையும் மக்களையும் தமிழ்மொழியையும் ஆழமாக நேசித்த ஒருவரை எமது தேசம் இன்று இழந்து நிற்கின்றது. தமிழீழப்பற்றாளரான பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்கள், 14.06.2025 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ் மக்களையும் எம்மையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இவர், தாய்மொழிப்பற்றினால் தமிழில் பிறமொழிக்கலப்பை எதிர்த்தவர். தமிழீழத்தின் முதுபெரும் கலை இலக்கியவாதியும் தமிழ்மொழி ஆசிரியரும் ஆய்வாளரும் கவிஞரும் தாயகப்பற்றாளருமான இவர் பன்முக ஆளுமையின் விருட்சமாவார்.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், 01.10.1995 அன்று பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்களுக்கு வழங்கிய வாழ்த்துரையில், “பண்டிதர” வீ.பரந்தாமன் அவர்கள் ஒரு விடுதலைப்பற்றாளர். தமிழினம் தன்னாட்சி பெறவேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கையுடையவர். தமிழர் தாயகம் விடுதலைபெற்று இறையாட்சியுடைய சுதந்திரநாடாக உருவாகவேண்டும் என்பது அவரது ஆழமான அபிலாசை. தமிழீழம் அவரது இலட்சியக்கனவு. பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் தமிழ்மொழியில் ஆழமான புலமைபெற்றவர். தமிழ்மொழியின் தனிச்சிறப்பை உணர்ந்தவர். தமிழைத் தெய்வமாகத் தொழுபவர். இன்பத்தமிழில் இறையின்பம் காண்பவர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவர், 1995 தொடக்கம் 2009 வரை தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி அவர்களுடன் இணைந்து தமிழ்மொழி பயிற்சிக்கல்லூரியை உருவாக்கி, அதற்குரிய ஆலோசகராகவும் தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் அவர்களுடன் இணைந்து தமிழ்மொழி சார்ந்த மேலதிக வளர்ச்சிப்பணிகளையும் செய்திருந்தார். மேலும், தமிழீழக் கல்விக்குழுவின் தமிழ் ஆசிரியராகப் போராளிகளுக்கு மொழியறிவையும் மேம்படுத்தியிருந்தார். தூயதமிழில் குழந்தைகளிற்கு பெயர் சூட்டவேண்டுமென்ற நற்சிந்தனையோடு தமிழ்ப்பெயர் அகராதியை உருவாக்கியதோடு, பிள்ளைகளிற்கு தமிழ்ப்பெயர் சூட்டும் பணியில் சிறப்போடு பணியாற்றியிருந்தார்.
இவரின், தமிழ்ப்புலமையும் விடுதலைப்பற்றும் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழீழப் புரட்சிப்பாடல்கள் இன்றும் தமிழ்மக்கள் மனங்களில் ஒலித்தவண்ணம் உள்ளன. இவர் பெண்ணடிமை, பண்பாட்டுச்சிதைவுகள், குடும்பவன்முறை சார்ந்த விழிப்புணர்வு நாடகங்களை எழுதி, அவற்றைப் பயிற்றுவித்து, அரங்கேற்றியிருந்த சமூகச் சிந்தனையாளருமாவார்.
தமிழ்மொழி மீதும் தமிழீழத் தேசியத்தலைவர் மீதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஆழமான பற்றுக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்,நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், பண்டிதர் வீரகத்தி பரந்தாமன் அவர்கள் தமிழ்மொழிக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் ஆற்றிய பணிக்காக, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையின் வழிகாட்டுதலில் “மாமனிதர்” என்ற தமிழீழத்தின் அதியுயர் தேசியவிருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
