
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக தமிழியல் பட்டப்படிப்பிற்கான
புதிய மாணவர்கள் பதிவும்,வரவேற்பு நிகழ்வும் இன்று (15/06/2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 17.30 மணிக்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் சிறப்பாக
இடம்பெற்றது.

வளர்தமிழ் 12 முடித்தவர்களும், தமிழ்ச்சோலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தமிழில் ஆர்வம் உள்ளவர்களும் இப்பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இம்முறையும் குறித்த பட்டப்படிப்பினைத் தொடர பலரும் ஆர்வத்துடன் முன்வந்தமையைக் காணமுடிந்தது. அகவணக்கம் செலுத்தப்பட்டு குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக தமிழியல் கற்கை நெறியைத் தொடரும் மாணவர்களால் கற்கையை நிறைவு செய்த மாணவர்கள் பூங்கொத்துவழங்கி வரவேற்கப்பட்டதுடன், அவர்கள் பற்றிய அறிமுகமும் செய்துவைக்கப்பட்டு கவியுரைத்து நினைவுப் பரிசும் வழங்கி அவர்களின் அனுபவப் பகிர்வுகளுடன் பசுமை நிறைந்த நினைவுப் பாடல் ஒலிக்க கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கப்பட்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
Ø குகதாசன் மாதங்கி
Ø இரத்தினசிங்கம் கோகிலா ஹிமாலினி
Ø இராசசூரியர் இந்திரஜித்
Ø நாகயோதீஸ்வரன் டினோயன்
Ø ஜோசப் அன்ரனியூட் யூட்கிறேசியா
Ø மனோகரன் லிஷானி
Ø நிக் ஷன் ரஞ்சித் குமார் குயின் மூடித் ஓவியா
Ø மோகனராசன் ரஜீவன்ராஜ்
ஆகிய மாணவர்களே கற்கையை நிறைவு செய்தவர்களாவர்.
இவர்களில் வளர்தமிழ் 12 இனை நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் தமிழ்ச்சோலை ஆசிரியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கொள்கையைத் தொடரும் மாணவர்களும் புதிய மாணவர்களும் தம்மை மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அவர்களும் தமது உள்ளக்கிடக்கைகளைப் அழகாகப் பகிர்ந்து கொண்டமை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
விரிவுரையாளர்களும் தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்
சோதியா கலைக்கல்லூரியின் பிரதம நிர்வாகி திரு.செல்வக்குமார் அவர்களும் தனது உணர்வினைப் பகிர்ந்திருந்தார்.
சோதியா கலைக்கல்லூரியில் இம்முறை வளர்தமிழ் 11 இனை நிறைவு செய்த 3 மாணவர்கள் ஆர்வமிகுதியினால் நிகழ்வில் கலந்துகொண்டு, தாம் வளர்தமிழ் 12 இனை நிறைவு செய்தவுடன் பட்டப்படிப்பைத் தொடரவுள்ளதாக உறுதிகூறியமை ஏனையவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
நிறைவாக தமிழ்ச் சோலைத் தலைமைப் பணிமனை தமிழியல் பட்டப்படிப்பு சார்பில் அனைவருக்கும் நன்றியுரைக்கப்பட்டது.
தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஐரோப்பிய மட்டத்திலான பட்ட மேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயம்.










( தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு – ஊடகப் பிரிவு)