
டெல் அவிவ்/தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் இன்று (வெள்ளிக்கிழமை) பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மத்திய டெல் அவிவ் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல ஏவுகணைகளை இடைமறித்து வீழ்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புத் தேடி தஞ்சம் புகுமாறும் இஸ்ரேலிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் ஈரானின் இராணுவத் தரப்பு தங்கள் தாக்குதல்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தளங்கள் மீதே மேற்கொள்ளப்பட்டதாகவும் பலத்த சேதங்களை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரானின் அச்சுறுத்தலும் தாக்குதலும்:
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி முன்னதாக இஸ்ரேலை எச்சரித்திருந்தார். ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் இராணுவத் தலைமைத்துவம் மீது இஸ்ரேல் நடத்திய பரந்த தாக்குதலுக்காக, இஸ்ரேல் “கடுமையான தண்டனையை” எதிர்பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அச்சுறுத்தலின் பின்னணியிலேயே, ஈரான் தற்போது இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

மோதல் தீவிரமடையும் நிலை:
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், மக்கள் வசிக்கும் சிவில் பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை வீசியதன் மூலம் ஈரான் ‘சிவப்புக் கோட்டை’த் தாண்டியுள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை தொடங்கி நாள் முழுவதும் தொடர்ச்சியான தாக்குதல்களை இஸ்ரேல் ஈரான் மீது நடத்தியிருந்தது. இந்தத் தாக்குதல்களில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைத் தலைவர் கொல்லப்பட்டதுடன், பத்துக்கு மேற்பட்ட ஈரானிய இலக்குகளும் தாக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல், பிராந்தியத்தை நிச்சயமற்ற விளைவுகளைக் கொண்ட ஒரு புதிய மோதலுக்குள் தள்ளியுள்ளது.