அனைத்துலகப் பொதுத்தேர்வு 2025-யேர்மனி – நான்காயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

0
11

தமிழீழத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் அனைத்துலகப் பொதுத்தேர்வு நடாத்தப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12வரை தமிழ் பயிலும் 4000க்கு மேற்பட்ட மாணவர்கள் மேற்படி தேர்வில் பங்கேற்கின்றார்கள். 

இன்று 07.06.2025 சனிக்கிழமை இத்தேர்வு நடைபெறுகிறது. தமிழாலயங்களின் வகுப்பறைகளில் மாணவர்கள் கேட்டு, எழுதி, வாசித்துக் கற்றவற்றை மதிப்பீடு செய்யும் ஓர் அளவுகோலாகவே இத்தேர்வு நடாத்தப்படுகிறது.

யேர்மனியின் தேர்வு நிலையங்களைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப்பிரிவின் திட்டமிடல்களும் பட்டறிவின் பக்குவங்களும் மிகவும் சிறப்பாகப் பொறிமுறை வகுத்து நடாத்துகின்றது. நாடுமுழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 72 சிறப்புத் தேர்வு நிலையங்களில் 59 இளைய முதன்மை மேற்பார்வையாளர்களும் ஏனைய நிலையங்களுக்கு வழமையாகப் பணியாற்றும் முதன்மை மேற்பார்வையாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 450க்கு மேற்பட்ட மூத்த, இளைய துணை மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டிலிருந்து சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இத்தலைமுறை மாற்றத்திற்கான செயற்பாடானது தமிழ்க் கல்விக் கழகத்தின் வளர்ச்சிப் பாதையில் இன்னொரு பரிமாற்றத்தின் வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வினாத்தாள் பொதிகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் நடுவச் செயலகத்திலிருந்து பொறுப்பேற்ற நகரம் சார் தேசியச் செயற்பாட்டாளர்கள் அவற்றைப் பாதுகாப்பாகத் தேர்வு நிலையங்களுக்கு எடுத்துச் சென்று, 14:00 மணிக்குத் தேர்வு நிறைவுபெற்ற பின்னர் விடைத்தாள் பொதிகளைக் கண்ணியத்துடன் மீண்டும் நடுவச்செயலகத்திடம் கையளிப்பார்கள். இச்செயற்பாட்டில் தாயமைப்பின் மாநிலப் பொறுப்பாளர்களின் ஒருங்கிணைந்த பணியும் சிறப்புக்குரியதாகும்.

புலம்பெயர் நாட்டில் தாய்மொழித் தமிழைத் தமது பிள்ளைகளுக்கு ஊட்டிவிட உழைக்கும்; பெற்றோர்களும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு வலுச்சேர்க்கும் ஆசான்களும் நிருவாகிகளும் தாய்மொழி வளர்க்கும் பணியில் செம்மையுடன் ஈடுபட்டிருப்பதைக் காணும்காட்சி எமக்கு மனநிறைவைத் தருகின்றது. அகரத்தைச் சிகரமாக்கிய பெருமையுடன் தமிழ்க் கல்விக் கழகக் குழுமம் கைகோர்த்து மகிழும் நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் தமிழாலயங்கள் ஊடாக விதைத்த தமிழ்மொழியானது யேர்மனிய நாட்டில் பெருவளர்ச்சி கண்டுள்ளமை எம்மைப் பெருமைகொள்ள வைக்கிறது. எமது இளைய தலைமுறையினர் வகுப்பறைகளில் ஆசான்களாகவும்; பொறுப்பு சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டிருப்பது இதற்குச் சான்;று பகர்கிறது. இவ்வுன்னத பணியில் எம்முடன் இணைந்து சளைக்காமல் தொண்டாற்றிவரும் அனைவரையும் இந்நன்னாளில் தமிழ்க் கல்விக் கழகம் நன்றியுடன் கரம் பற்றுகின்றது.

அறிமுறைத் தேர்வைத் தொடர்ந்து 15, 21 ஆகிய நாள்களில் கேட்டல், பேசுதல், வாசித்தல் ஆகிய புலன் வளங்களுக்கான தேர்வு தமிழாலயங்களில் நடைபெறவுள்ளது. 70 விழுக்காடு புள்ளிகள் அறிமுறைத் தேர்விற்கும் 30 விழுக்காடு புள்ளிகள் புலன்வளத் தேர்விற்கும் வழங்கப்பட்டு, மாணவர்களின் இறுதிநிலை கணிப்பிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here