
பிரான்சு மண்ணில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு நடாத்தும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2025 இற்கான எழுத்துத் தேர்வு இன்று (07-06-2025) நடைபெறுகின்றது.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால், தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படும் இத்தேர்வானது புலன்மொழிவளத் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகிய இரு பகுதிகளைக் கொண்டது. புலன்மொழிவளத் தேர்வு கடந்த மே மாதம் 03, 04, 11 ஆகிய நாட்களில் நடாத்திமுடிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வானது இல்-து-பிரான்சில் (Île-de-France) லாபிளாஸ் (Laplace) நகரிருள்ள அரச தேர்வு மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதில் 5393 மாணவர்கள் தோற்றுகின்றனர். இதைவிட வெளிமாகாணங்களிலுள்ள Nice, Beausoleil, Strasbourg, Mulhouse, Gien, Toulouse, Rennes, Tours, Lyon, Bordeaux, Nevers, Bordeaux Grand Parc, Chalette-sur-Loing நகரங்களிலுள்ள தேர்வு நிலையங்களிலும் இத்தேர்வு நடைபெறுகின்றது. இந்நகரங்களில் 325 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் 2002 ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டுவரும் இப்பொதுத்தேர்வு இம்முறையுடன் 24 ஆண்டுகளை நிறைவுசெய்கின்றது. இத்தேர்வானது 2005 இலிருந்து லாபிளாஸ் அரச தேர்வு மண்டபத்தில் நடைபெறத் தொடங்கியது.
இத்தேர்வானது வளர்தமிழ்-01 தொடக்கம் வளர்தமிழ்-12 வரையான வகுப்புகளுக்கு நடாத்தப்படுகின்றது.
இத்தேர்வில் பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கும் 66 தமிழ்ச்சோலைகளின் மாணவர்களும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் தேர்வில் இணைந்து கொள்ளும் 5 தனியார் பள்ளிகளின் மாணவர்களும் தனித்தேர்வர்களுமாக மொத்தம் 5718 மாணவர்கள் இத்தேர்வில் தோற்றுகின்றனர்.
