பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்மொழி பொதுத்தேர்வு -2025

0
64

பிரான்சு மண்ணிலே தமிழ்மொழி தழைத்தோங்க உழைக்கும் அனைவரதும் ஒருமித்த பங்களிப்புடன் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025 இன்று 07.06.2025 சனிக்கிழமை சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

அதன் முழு விவரம் வருமாறு:-

நன்றி நவில்கிறோம்
பிரான்சு மண்ணிலே தமிழ்மொழி தழைத்தோங்க உழைக்கும் அனைவரதும் ஒருமித்த பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025. பிரான்சின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 66 தமிழ்ச்சோலைகளில் பயில்வோர், மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயில்வோர்களுடன் தனித்தேர்வர்களுமாக 5718 மாணவர்கள் இத்தேர்வில் தோற்றியிருந்தனர்.
மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது இத்தேர்வு.
புலன்மொழிவளத் தேர்வுகளுக்கு மண்டபங்களைத் தந்துதவிய அனைத்து நகரசபைகளுக்கும் அதற்கு வழிவகைசெய்த அந்தந்தப் பகுதிகளின் தமிழ்ச்சங்கங்களுக்கும் எமது நன்றி. அத்துடன் இல்-து-பிரான்சு (ÎLE-DE-FRANCE) மாணவர்களுக்கான எழுத்துத்தேர்வு சிறப்புற நடந்தேற ஒத்துழைத்த அரச தேர்வு மண்டபத்தினருக்கும் ஆர்க்கை (ARCUEIL) நகரசபைக்கும் மற்றும் அரச அமைப்புகளுக்கும் எமது மனப்பூர்வமான நன்றி.
எப்போதும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வின் வெற்றிக்குப் பக்கபலமாக எம்முடன் இணைந்து பணியாற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினதும் அதன் உப-கட்டமைப்புகளினதும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பினதும் கரங்களை நாம் நன்றியுடன் பற்றிக்கொள்கிறோம்.
இத்தேர்வுப்பணிகளின் ஒவ்வொரு கட்டத்திலும் எம்முடன் இணைந்து பணியாற்றிய தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றி. இவர்களின் பங்களிப்பு தமிழ் அடுத்தடுத்த தலைமுறைகளிலும் பிரான்சு மண்ணில் நின்றுநிலைத்துச் செழித்தோங்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
தேர்வுப்பணிகளில் எம்மோடு இணைந்து ஒத்துழைத்த அனைத்துத் தமிழ்ச்சோலைகளினதும் தனியார் பள்ளிகளினதும் நிர்வாகிகள், தமிழ்ச்சங்கத்தலைவர்கள், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், தமிழ்ச்சோலைச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழார்வலர்கள் அனைவருக்கும் எமது மனதார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்ந்து ஊக்கத்துடன் தமிழ்மொழியைப் பயின்று இந்தத் தேர்விற்குத் தோற்றிய மாணவர்களுக்கும் அவர்களை நெறிப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுகள்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் 23வது தடவையாகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வினை நடாத்தி முடித்துள்ளது. அனைவரதும் ஒருமித்த ஒத்துழைப்பால் ஒவ்வோராண்டிலும் இத்தேர்வு மென்மேலும் சிறப்படைந்து வருகின்றது. இதற்குக் காரணமாய் திகழும் அனைவருக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றி நவில்கின்றது.
தமிழுக்காய் வாழ்ந்திருப்போம்! தமிழால் இணைந்திருப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here