
சிங்களப்பேரினவாத அரசுகளினால் காலத்திற்குக்காலம் தமிழ்மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளின்போது பலியாகிய தமிழ்மக்களையும் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அரசபடைகள் மேற்கொண்ட இனவழிப்புப் போரின்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களையும் நினைவுகூருகின்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வு முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரில் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் 16வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மெல்பேர்ண் நகர மத்தியில் அமைந்துள்ள ஹங்கேரியன் சமூகமைய மண்டபத்தில் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு இளையசெயற்பாட்டாளர் செல்வி லக்சிகா கண்ணன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதல் நிகழ்வாக பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், பொதுச்சுடரினை முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரிலிருந்து மீண்டுவந்த திரு. இரத்தினம் கிரிஷாந்த் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து, அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை சமூகச்செயற்பாட்டாளர் திரு. செந்தில்நாதன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத்தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. றமேஸ் பாலா அவர்கள் ஏற்றிவைத்தார்.
அடுத்து முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரில் காவுகொள்ளப்பட்ட தமிழ்மக்களின் நினைவாக, நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப்பீடத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. இவ் ஈகைச்சுடரினை முள்ளிவாய்க்கால் பேரவலங்கள் நிகழ்ந்தபொழுது அன்றையநாட்களில் இரண்டு வயது குழந்தையாகவிருந்து அந்த அவலங்களிலிருந்து மீண்டுவந்த செல்வி. புகழ்ப்பரிதி கமல்ராஜ் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பீடத்திற்கான மலர்வணக்கம் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் வரிசையாக வந்து நினைவுப்பீடத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
அடுத்து அகவணக்கம் இடம்பெற்றது. தாயகவிடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள், இலங்கை இந்தியப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மாமனிதர்கள் ஆகியோர்களை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அடுத்து வணக்கநடனம் இடம்பெற்றது. நடன ஆசிரியை திருமதி. மீனா இளங்குமரன் அவர்களது நெறியாள்கையில் மெல்பேர்ண் நடனாலயாப்பள்ளி மாணவிகளின் வணக்க நடனம் இடம்பெற்றது. வணக்க நடனமாக “நந்திக் கடலலையே நந்திக் கடலலையே எம்மோடு வந்து பேசலையே எங்கள் உறவெங்கே எங்கள் உறவெங்கே உன் மெளனம் கலைத்து சொல்லலையே……” என்ற பாடலுக்கு வணக்க நடனத்தை வழங்கினார்கள்.
அடுத்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுகளை உள்ளடக்கிய நினைவுக்கவிதை ஒன்றை செல்வி. சானுஜா சுரேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.
அதனைத், தொடர்ந்து நிகழ்வின் சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. வசந்தன் ஆனந்தராஜா அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக சமூக அறிவித்தல்களுடன் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் மாலை 7.30 மணியளவில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2025 நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றது.
வழக்கம்போல நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




























