
சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025
தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வு சிறப்பான முறையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றுள்ளது. 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு Blacktown High School மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பொதுச்சுடரினை கப்டன் இளங்கோ என அழைக்கப்படும் பாலசிங்கம் முகுந்தன் அவர்களின் சகோதரன் பாலசிங்கம் பாஸ்கரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, அவுஸ்திரேலிய பழங்குடிமக்களின் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் நவேந்திரராசா காளிராசா அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியக் கொடியை Anthony D’Adams (NSW Member of the Legislative Council – MLC) அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர் கப்டன் யோகன் என்று அழைக்கப்படும் யோகசிங்கம் அழகுதுரை அவர்களின் மகள், திருமதி. தமிழ்நிலா யோகசிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரினை, தனது 14 வயதில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்தேறிய மனிதப் பேரவலத்தின் மத்தியில் தப்பி உயிர்பிழைத்த சாட்சியமாக வாழ்ந்துவரும் கப்டன் ஆழிக்குமரன் அவர்களின் சகோதரன் தமிழ்ச்செல்வன் செல்வகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார். சமநேரத்தில், இளையோர்கள் இணைந்து நினைவுச் சுடர்களை ஏற்றினார்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, அனைவரும் வரிசையாக சென்று இனவழிப்பின் சாட்சியாக அமைக்கப்பட்ட பொதுவணக்க பீடத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினார்கள்.
முதல் நிகழ்வாக “ஓலங்கேட்டதோ” என்ற பாடலுக்கான நடன நிகழ்வை இளையோர்கள் வழங்கினர். அனைவரது உணர்வுகளை தொடும்விதமாக நடன நிகழ்வு அமைந்திருந்தது.
தொடர்ந்து, தமிழீழத் தாயக மக்களின் வலி சுமந்த வரலாற்றை விளக்கும் கருத்துப் பகிர்வை இளையோர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கினர் வழங்கினர்.
அடுத்ததாக, வலிசுமந்த வாழ்வின் துயரங்களை வெளிப்படுத்தும் இன்னொரு நடனத்தை இரண்டு இளையோர்கள் சிறப்பாக வழங்கினர்.
தொடர்ந்து, ஆறு சிறுவர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் வலிசுமந்த வரலாற்றை விளக்கும் சிறு உரைகளை இணைந்து வழங்கினர்.
தொடர்ந்து, நியு சவுத் வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் Hugh McDermott (NSW Member of Parliament for the electorate of Prospect) அவர்களும், Warren Eric Kirby (NSW Member of Parliament for the electorate of Riverstone) பசுமைக் கட்சியைச் கட்சியைச் சேர்ந்த Senator David Shoebridge அவர்களின் பிரதிநிதியாக Councilor Damien Aitkins அவர்களும், மற்றும் குருடிஸ் (Kurdish) இன மக்களின் பிரதிநிதியாக தோழமையோடு திருமதி Dilvan Bircan அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
நிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதியுரை ஏற்புடன் நிகழ்வு இரவு 7.30 இற்கு நிறைவடைந்தது.
இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் வலியையும் உறுதியையும் பிரதிபலிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.






















































































