
தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்37 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு பாரிஸ் நகரின் புறநகர் பகுதியான திரான்சிப் பிரதேசத்தில் இன்று 19.04.2025 சனிக்கிழமை பி. பகல் 15. 00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு, மாவீரர் பணிமனையுடன் இணைந்து நடாத்தப்பட்டது.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரை திரான்சி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. நரேஸ்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மாவீரர் பொதுப்படத்திற்கான சுடரை 29.12.1992 அன்று வீரச்சாவடைந்த மாவீரர் அமலனின் சகோதரி அவர்களும் , தமிழீழத்தாயவள் அன்னை பூபதியம்மாவின் திருவுருவப்படத்திற்கான சுடரினை 09.06.1991 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப்.மாணிக்கம் அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க, நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படங்களிற்கான சுடர்களை நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராசா, நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி, நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் சந்தியோகு, நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின், நாட்டுப்பற்றாளர் அகிலன் சந்திரராசா, நாட்டுப்பற்றாளர் சதாவேல்மாறன், நாட்டுப்பற்றாளர் அன்ரன் ஜெயசோதி (கமல்) ஆகியோரின் உறவுகள் ஏற்றி வைத்து மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களின் சுடர், மலர் வணக்கம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழக கலைஞர்கள், பாடகர்கள், விடுதலைப்பாடல்களையும், எழுச்சிப்பாடல்களையும் கரோக்கி இசைமூலம் வழங்கினர். மாவீரர் பாடல்களுக்கான நடனத்தை ஒள்னே சுபுவா தமிழ்ச்சோலை,,செவ்றோன் தமிழ்ச்சோலை, செல் தமிழ்ச் சோலை, வில்பந் தமிழ்ச் சோலை மாணவர்கள் வழங்கினர். அன்னை பூபதி அம்மா நினைவு சுமந்த கவிதையை கந்தவேல் மோசிகா அவர்களும் பேச்சுக்களை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த திருமதி நித்தியானந்தன் சிவகுமாரி அவர்களும், ஜெயிலன் அகிர்னா அவர்களும் செவ்ரோன் தமிழ்ச் சோலை மாணவன் சர்வசீலன் அகரன் அவர்களும் ஆற்றியிருந்தனர்.

சிறப்பு உரையினை அரசியல் பிரிவைச் சேர்ந்த சிறிரங்கன் கரணி அவர்கள் ஆற்றியிருந்தார்.

தொடர்ந்து “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவு கண்டது.
(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு- ஊடகப்பிரிவு)




















