
காணாமல் போன உறவுகள் தொடர்பான அலுவலகமான ஓ.எம்.பியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று 25.08.2026 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வதேச காணாமல் போனோர் தின நிகழ்வை கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இன்று நடைபெற்றது.

“ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்”, “இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

அத்துடன், உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் வகையில் செயற்படும் ஓ.எம்.பி. வழங்கும் இழப்பீடு வேண்டாம், மரணச் சான்றிதழும் வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் உண்மையையும் நீதியையும் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேச விசாரணையே அவசியம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

பனையால் வீழ்ந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக தமது உறவுகளை பிரிந்து வாடும் உறவுகளைக் காவல்துறையினர் காலால் உதைத்து தள்ளி மிதித்து தமது கோரமுகத்தைக் காட்டியதை அனைவரையும் கொதித்து எழவைத்தது.
இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








