
காட்டிக்கொடுப்பு!…
“இந்தியன் ஆமி எங்கட நாட்டுக்கு வந்து, எங்கட சனங்களையே கொல்லுறாங்கள். வெளிக்கிட்டு வரட்டும் இருக்கு ஆக்களுக்கு… அவங்களின்ர வாசலிலையே அவங்களுக்கு முடிவிருக்கு.”
இந்திய இராணுவத்தின் முகாமுக்குள் சென்று மிதிவெடிகளைப் புதைத்துவிட்டு, உதவிக்குச் சென்ற ஈசனோடு கதைத்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.
இந்திய இராணுவம் வெளிய வருகிறார்களா எனப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
“ஏதும் சிலமன் தெரியுதோ மச்சான்?” – ரமேஷ்.
“ஒன்றையும் காணேல்ல…” – ஈசன்.
தன்னுடைய வீடு அருகே உள்ளதால், அம்மாவைப் பார்க்கும் ஆசை வந்தது ரமேஷுக்கு.
“மச்சான் அம்மான்ர நினைவாவே இருக்கு. நீ இஞ்ச நின்று என்ன நடக்குது என்று பார், நான் அம்மாட்ட போய்ற்று உடனே வாறன்.”
“ம்” ஈசன்.
சயனைட் குப்பி இருக்கிறதா எனச் சரிபார்த்துவிட்டு அம்மாவைப் பார்க்கச் சென்றான் ரமேஷ்.
“என்ர ராசா, இப்பவெண்டாலும் ஞாபகம் வந்ததே… வா” எனக் கட்டி அணைத்து முத்தமிட்டார் ரமேஷின் அம்மா.
“தனியவே ராசா வந்தனி?”
“இல்லை அம்மா, ஈசன் வந்தவன்; கொஞ்சம் தள்ளி நிக்கிறான்.”
“ஏதாவது சாப்பிடன் ராசா…?”
“இல்லையம்மா, நான் வேற இடம் போகவேணும். பிறகொருநாள் வாறன்.”
உரையாடிக் கொண்டிருந்த நேரம், வீட்டை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துவிட்டதை உணர்ந்தான் ரமேஷ். வந்திருப்பது அதிகளவிலான இராணுவம். தப்ப வழியில்லை அதே நேரம் தமியொருவனாக எதிர்த்துச் சண்டை போடவும் முடியாது.
“அம்மா…”
“என்ன ராசா…”
“உங்கட மடியில் படுக்கலாமா?”
“என்ர ராசா, இஞ்ச வா படு.”
அம்மாவின் மடியில் படுத்தான் ரமேஷ். “நறுக்” என்று சத்தம் கேட்டது. குப்பியிலிருந்து உடைந்த சிறிய பீங்கான் துண்டுகள் நிலத்தில் விழுவதற்கு முன்னர், தன் தாயின் மடியிலேயே உயிரை விட்டுத் தன் சாவை வீரச்சாவாக மாற்றினான் ரமேஷ்.
(பின்னர் விசாரணையில், ஈசன்தான் ரமேஷை இந்திய இராணுவத்திடம் காட்டிக் கொடுத்தான் என்று உறுதியானது. இந்தக் கதையைத் தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம் திரைப்படமாக உருவாக்கியிருந்தார்கள்.)
▪️பண்டைய கால வீரக் கதைகள் தான் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டுமென்றில்லை. நம் காலத்திலே நடந்த ஆயிரமாயிரம் வீரக்கதைகளையும் சொல்லலாம்.
(வீரக்கதைகள் இன்னும் வரும்)


