ஈரானின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டடுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ஈரானில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 10 நிமிட இடைவேளையில் ரிக்டர் அளவில் 5.0-ஆக மற்றுமொரு நில நடுக்கம் ஏற்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை. எனினும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இரு வாரங்களுக்கு முன்னர் ஈரான் – இராக் எல்லையிலுள்ள கேர்மான்ஷா மாகாணத்தில் ரிக்டர் அளவில் 7.3 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 400 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரானை பொறுத்தவரை அந்த நாடு தொடர்ந்து நிலநடுக்க பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. 1990களில் ஈரானில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு சுமார் 40,000 பேர் பலியாகினர். 3,00,000க்கும் அதிகமான பொதுமக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
2005,2012 ஆகிய வருடங்களில் ஈரானில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு முறையே 600,300 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.