கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங் களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கடந்த வெள்ளி (24) 25 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வீதியோரத்தில் வெயில், கொட்டும் பனி மற்றும் இன்னோரன்ன இன்னல்களையெல்லாம் தாண்டி சொந்தமண்ணில் கால்பதிக்க வேண்டும் என்ற பேராசையுடன் இவர்களது அறவழிப் போராட்டம் தொடர்கின்றபோதிலும் இதுவரை தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.
தென்பகுதியை சேர்ந்த சிங்கள, தமிழ் இளைஞர்கள் நேற்றைய தினம் கேப்பாப்புலவு மக்களின் போராட்ட களத்துக்கு வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடியதுடன் தமது ஆதரவினையும் வெளிப்படுத்தியிருந்தனர். மொனராகலை பகுதியை சேர்ந்த சிங்கள மற்றும் தமிழ் இளைஞர் யுவதிகளே இவ்வாறு வருகை தந்திருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் கருத்து வெளியிட்ட சிங்கள இளைஞர், யுவதிகள் தற்போது நேரில் வந்து பார்க்கும் போதுதான் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை புரிந்துகொள்ள முடிகின்றது எனவும் தென்பகுதியில் வட பகுதி தமிழ் மக்கள் பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் நேரில் இந்த மக்களின் அவலங்களை பார்க்கும்போது அது அனைத்தும் வதந்திகள் என்பது புரிகின்றது எனவும் தெரிவித்தனர்.
அத்தோடு நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைதந்த அருட்தந்தையர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
Home
ஈழச்செய்திகள் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு சிங்கள இளைஞர்,யுவதிகளும் நேரில் சென்று ஆதரவு