முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு முயற்சித்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி கடந்த 15 ஆம் திகதி காணாமல் போயுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யபட்டுள்ளது.
இதற்கு அமைவாக நான்கு நாள் தேடுதலின் பின்னர் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சிறுமியின் சடலம் மீதான சட்ட மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேற்றைய தினம் மருத்துவ அறிக்கை வெளியாகியிருந்தது.

பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதோடு இரண்டு மாதம் சிறுமி கருவுற்றும் இருந்துள்ளார்.
இதன்மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும், சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தக் கோரியும் கொலை செய்யபட்ட சிறுமியின் கிராமமான மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள்,சிறுவர்கள்,இளைஞர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கறுப்புக் கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மூங்கிலாறு சந்தியிலிருந்து உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாகச் சென்றனர்.


