

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று கிளிநொச்சியில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகம் முன்பாக நேற்று முற்பகல் 11 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் அமைப்பினரால் போராட்டம் நடத்தப்படுகின்றது. இதையொட்டியே நேற்று 30ஆம் திகதி போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டம் ஆரம் பமாகி 1349ஆவது நாளாகத் தொடர்கின்றமை குறிப்பிடத் தக்கது.

இதேவேளை வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் கவனவீர்ப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘எங்கே எங்கே ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே’, ‘பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே’, ‘வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களுக்குப் பதில் தா’, ‘வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை’, என்ற சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
அத்துடன், இவற்றையே கொட்டொலியாகவும் அவர்கள் எழுப்பினர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


