
மன்னார், தாழ்வுபாடு கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இந்திய படகு ஒன்று, நேற்று (28) வெள்ளிக்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
‘ஜோசப் இம்மானுவேல்’ எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த படகு. மன்னார்-தாழ்வுபாடு கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் நேற்றுமுன்தினம் (27) வியாழக்கிழமை மாலை கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வள்ளத்தில் எவ்விதமான பொருட்களும் இல்லாத நிலையில் வெறுமையாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரை ஒதுங்கிய வள்ளத்தை அப்பகுதி மீனவர்கள் கரையில் இழுத்து வைத்ததுடன் தாழ்வுபாடு கடற்படையினருக்கும்; தகவல் வழங்கியுள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினர் மன்னார் கடற்றொழில் திணைக்களத்திற்கு தெரியப்படுத்திய நிலையில் நேற்று (28) முற்பகல் தாழ்வுபாடு கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கரையொதுங்கிய வள்ளத்தைப் பார்வையிட்டதுடன் குறித்த வள்ளத்தை பாதுகாப்பிற்காக தாழ்வுபாடு கடற்படை எல்லைக்கு மீனவர்களின் உதவியுடன் கொண்டு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சிறிலங்கா கடற்படை மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


