யாழ். மனித எச்ச விவகாரம்:18 ஆம் திகதி தொடர நீதிமன்றம் பணிப்பு!

0
206

யாழ்ப்பாணம் – பண்ணை, கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணியில் பெண் ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்துக்கடியிலிருந்து வெளிப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் அகழ்வுப் பணியை முன்னெடுத்து மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்வதை வரும் 18ம் திகதி வரை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஒத்திவைத்தார்.

நிபுணத்துவ மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் மனித எச்சங்களை மீட்டெடுக்கு அகழ்வுப் பணியை முன்னெடுக்கும் வகையில் இவ்வாறு மீட்புபணி ஒத்திவைக்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோவில் வீதியில் தனியார் காணி ஒன்றில் இன்று காலை நிலத்தை தோண்டும் போது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் தென்பட்டன. அவைதொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் பி அறிக்கையைத் தாக்கல் செய்து அந்த இடத்தில் ­அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி கோரினர்.

அதனடிப்படையில் இன்று மாலை சம்பவ இடத்துக்குச் சென்று யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை சான்றுப்பொருள்களாகக் கொண்டு மேலும் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து மனித எச்சங்கள் உள்ளனவா என்று ஆராய்வதற்கு பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டது.

நிபுணத்துவ சட்ட மருத்துவ அதிகாரி உ.மயூரதன், தற்போது கடமை விடுப்பில் உள்ளதால், அவரது முன்னிலையில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க உத்தரவிட்ட பதில் நீதிவான், பணிகளை வரும் செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைத்தார்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் ஆடைகளை அதே இடத்தில் வைத்து பாதுகாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட பதில் நீதிவானால் பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு கடமையில் அமர்த்துமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here