வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் இரு உந்துருளிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இந்து மதகுரு ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (14.04.2020) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பூவரசங்குளம் – செட்டிகுளம் வீதியில் உள்ள மணியர்குளம் பகுதியில் சென்ற உந்துருளி ஒன்று வீதியில் திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மணியர்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடமையாற்றும் 47 வயது மதிக்கத்தக்க இந்து மதகுரு ஒருவரும் 26 வயதுடைய இளைஞர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த மதகுரு அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு இடம்மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.



