முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் காணிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப் படுவதும் புதிய குடியேற்றங்களை இலக்காகக்கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதும் தடுக்கப்படாவிட்டால் தமிழர்கள் அந்த மாவட்டத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் எச்சரிக்கின்றார்.
முல்லைத்தீவின் சூரியனாறு, பெரியாறு என்பவற்றை மறித்து கிவுல் ஓயா என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் பெரும் நீர்ப்பாசனத் திட்டம் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான தீர்மானம் ஒன்றை இன்று மாகாண சபையில் கொண்டுவரவுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:
காலங்காலமாகத் தனித்தனமை வாய்ந்த பண்பாட்டு அடையாளங்களோடு இருந்த பட்டிக்குடியிருப்பு, மருதோடை, ஒதியமலை, தண்டுவான், குமுழமுனை, நெடுங்கேணி, சாம்பன்குளம், வேப்பங்குளம்,கோட்டைக்கனி,ஆமையங்குளம், ஆலங்குளம், கண்ணாட்டி, அக்கரைவெளி எனப் பழைய கால ஊர்களும் குளங்களும் அதனை அண்டிய வயல்கள் குடியிருப்புகளுடன் அமைந்துள்ளது மட்டுமன்றி கடல் வள்ளங்களையும் மிகையாகக் கொண்ட கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற பாரம்பரிய இடங்கள் தமிழர்களின் பாரம்பரிய குடியிருப்புக்களாக இருந்தன.
எனினும் இதற்குள் சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தி அவற்றுக்கு புதிய சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டு தமிழர்களின் அடையாளங்கள் அளிக்கப்படுகின்றன.
அந்தவகையில் மண்கிண்டி மலை அல்லது மறிச்சுக்கட்டிக்குளம்– ஜனகபுர, ஆமையன் குளம் — கிரிபன்வெவ, முந்திரிகைக் குளம் அல்லது உந்துராயண் குளம் — நெலும்வெவ, சிலோன் தியேட்டர்ஸ் பண்ணை–கஜபாபுர அல்லது நவகஜபாபுர, கென் பண்ணை–கல்யாணபுர, வெடிவைத்தகல்லு – -நிக்கவெவ, மயில்குளம்–மொனரவெவ, வவுனியா வடக்கு பிரிவுகள் சில ஹகட்டுகஸ்வெவ என சிங்களத்திற்குப் பெயர் மாற்றப்பட்டுள்ளன.
முல்லைத்தீவின் சூரியனாறு, பெரியாறு என்பவற்றை மறித்து கிவுல் ஓயா என்ற பெயரில் பெரும் நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.இத்திட்டத்திற்காக இராமன் குளம், கொட்டோடைக் குளம், வெள்ளாங்குளம், ஓயாமடுக்குளம், ஆகிய குளங்கள் மற்றும் அதற்குரிய வயல் நிலங்கள் யாவும் மூடப்பட்டு மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் பகுதியில் இருந்த நிலங்கள் யாவும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆகும். உருவாக்கப்படும் இந்தப் புதிய திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சக்கூடிய விதத்தில் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டே இந்த வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.
தமிழ் மக்கள் பலரின் கைகளில் தமது பூர்வீகக் காணிகளுக்கான சான்றாவணங்கள் இருந்த நிலையிலும் கடந்த அரச தலைவர் தேர்தலுக்கு முன்பாக குடியேற்றவாசிகளுக்கு புதிய அனுமதிப் பத்திரத்தை முன்னைய ஆட்சியாளர்கள் மயில்க்குளம் பகுதியில் வைத்து வழங்கியிருந்தார்கள்.
மகாவலி(ட)வலயம் தொடர்பான வர்த்தகமானி பிந்திய அறிவித்தல்கள் 1982, 1988, 2014 ஆகிய ஆண்டுகளில்வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் மகாவலி)(ட) வலயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வீதி உள்ளடங்கலாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகப் பகுதிவரையும் விரிவாக்கப்பட்டுள்ளது. இவைகள் மாவட்டத்தின் அபாயத்தை உணர்த்துவதாகவுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் கடந்த வருட புள்ளிவிவரத்தின்படி 39 ஆயிரத்து 590 தமிழ்க் குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 735 தமிழ் மக்களுக்கு ஒரு மாதிரியும் குடியேற்றப்பட்ட 3 ஆயிரத்து 336 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து ஆயிரத்து 189 சிங்கள மக்களுக்கு வேறு மாதிரியாகவும் அரசின் செயற்திட்டங்கள் அமைகின்றன.
இதே நிலை நீடித்தால் நீண்டகால அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழின இருப்பு குலைக்கப்பட்டு சிங்கள மக்களைப் பெரும்பான்மையினராகக் கொள்ளும் மாவட்டமாக மாறும் நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.