ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் கோபு மறைந்தார் !

0
219


கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ்ப் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் (வயது 87) நேற்றுக் காலமானார்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கோபாலரத்தினம் 1950களில் வீரகேசரியில் இணைந்து தனது பத்திரிகைத் தொழிலை ஆரம்பித்தார். அதன் பின்னர் 1956களில்  ஈழநாடு பத்திரிகையில் இணைந்து, பின்னர் அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றினார். கோபாலரத்தினம் அவர்களின் காலத்திலேயே ஈழநாடு பத்திரிகை மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது.
1981ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகை எரியூட்டப்பட்ட போது அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். அதன் பின்னர் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது, இந்திய இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டார். அந்த சிறை அனுபவங்களை தொடராக எழுதினார். ‘ஈழமண்ணில் ஓர் இந்திய சிறை’ என்ற அந்நூலை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் வெளியிட்டிருந்தது.
இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களான கானமயில்நாதன், திருச்செல்வம், குகநாதன், கந்தசாமி, அனந்த பாலகிட்ணர் போன்ற பல பத்திரிகையாளர்களை செதுக்கிய பெருமை எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களையே சாரும்.
2000ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பில் தங்கியிருந்த அவர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஆலோசகராக இருந்து அச்சங்கத்தை வழிநடத்தினார்.
நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களின் கைகள் இன்று ஓய்ந்து விட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here