நேற்று (18) முல்லைத்தீவுக் கடலில் குளிக்கச்சென்ற இளைஞர்கள் இருவர் திடீரெனக் கடலில் மூழ்கிய நிலையில், நான்கரை மணிநேரத் தேடுதலின் பின்னர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அவரது நண்பனான மற்றைய இளைஞனைத் தேடும் பணி இன்று அதிகாலை வரையும் தொடர்ந்தது. இன்று காலை அவரது சடலமும் மீட்கப்பட்டது.
முல்லைத்தீவு உண்ணாப்பிலவைச் சேர்ந்த அன்டனி கிளோட்டஸ் வினோதன் குறுஸ் (வயது –-18) என்ற மாணவனின் சடலமே நேற்று மாலை 6.30 மணிக்கு மீட்கப்பட்டது.
மணற்குடியிருப்பைச் சேர்ந்த அமல்ராஜ் டினோஜன் (வயது-–17) என்ற மற்றைய மாணவனின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.
முல்லைத்தீவு நகரச் சுற்றுலாக் கடற்கரைப் பகுதிக் கடலில் ஏழு இளைஞர்கள் நேற்று மதியம் குளிக்கச் சென்றுள்ளனர். திடீரென அவர்களில் இருவரை அலை இழுத்துச் சென்றது. எஞ்சிய ஐவரும் உடனடியாகக் கரைசேர்ந்தனர். அவர்கள் ஏனையோருக்குத் தகவல் வழங்கினர். கடற் றொழிலாளர்கள் துரிதமாகச் செயற்பட்டு படகுகளில் தேடுதல் நடத்தினர். ஆனால் உடனடியாக அவர்களை மீட்க முடியவில்லை..
மாணவர்கள் இருவர் அலையில் சிக்குண்டு காணாமல் போன செய்தி வேகமாகப் பரவியது. கடற்கரைப் பகுதியில் மக்கள் குவியத் தொடங்கினர்.
கடற்றொழிலாளர்களின் தேடுதல் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டபோதும் மாணவர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சம்பவம் இடம்பெற்று இரண்டரை மணி நேரத்தின் பின்னர் கடற்படையினர் அங்கு வந்தனர்.
இளைஞர்கள் அலையில் இழுபட்டுச் சென்றதாகச் சொல்லப்பட்ட பகுதியில் கரை வலையினை விரித்து, வலையின் இரண்டு பக்கமும் மக்கள் திரண்டு இழுத்தனர்.
மீனவர்கள் இதன் பின்னர் திருக்கைவலை எனப்படும் ஆழச்செல்லும் வலையினைப் பயன்படுத்தி அந்தப் பகுதியில் நான்கு படகுகள் சகிதம் தேடுதல் நடத்தினர்.
இதில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டதும் உறவினர்கள் கதறியழுதனர். மற்றையவரைத் தேடும் படலம் இன்று அதிகாலை வரை வெளிச்சம் பாய்ச்சியும் தொடர்ந்தது. இன்று காலை மற்றவரது சடலமும் மீட்கப்பட்டது