தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகின்றது.
அத்தியாவசியச் சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் பிரதான நகரங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு உணர்த்த முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் 19 அமைப்புகள் இணைந்து அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் நேற்று 40க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் அதற்கு ஆதரவு வழங்கின.
நாளை (14) சிறீலங்காஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் தாமதமற்றுத் தீர்வு காண வேண்டிய இந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்காக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் நிலையில் இயல்பு நிலைமை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மு.ப. 10 மணி தொடக்கம் பி.ப. 4 மணிவரை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. வவுனியாவில் தொடர் போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டதை நடத்துகின்றனர்.