பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டி 2017 இன் இறுதிப்போட்டிகள் பிரான்சு சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் விறுவிறுப்போடு நடைபெற்றது.

கடந்த (09.07.2017) ஞாயிற்றுக்கிழமை செவ்ரோன் பகுதியில் தெரிவு மற்றும் இறுதிப்போட்டிகளும் கடந்த (15.07.2017) சனிக்கிழமை தெரிவு மற்றும் இறுதிப்போட்டிகளும் நேற்று (16.07.2017) ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகளும் இடம்பெற்றிருந்தன.
இரண்டாம் நாளான 15.07.2017 சனிக்கிழமை ஈகைச்சுடரினை 28.08.2006 நாகர் கோவில் பகுதியில் வீரச்சாவடைந்த வீரவேங்கை மயூரன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
இறுதிநாளான நேற்று (16.07.2017) ஞாயிற்றுக்கிழமை சார்சல் நெல்சன் மண்டேலா மைதானப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப வணக்க நிகழ்வில் ஈகைச்சுடரினை 20.02.2008 அன்று மன்னார் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் இசைவேந்தன் அவர்களின் சகோதரன் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

பான்ட் தாளவாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்;து வரப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடரினை முன்னாள் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவரும் தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினருமான திரு.நந்தகுமார் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை சார்சல் மாநகர விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. ஜோசிலன் அசோர் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.கிருபா அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 20.02.2008 அன்று மன்னார் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் இசைவேந்தன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்வில் கடந்த (14.07.2017 ) வெள்ளிக்கிழமை சாவடைந்த தமிழின உணர்வாளரும் தமிழ்த் தேசிய ஓவியர் திரு.வீரசந்தானம் ஐயா அவர்களுக்கான நினைவேந்தலும் இடம்பெற்றது. வீரசந்தானம் ஐயா அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 09.07.1997 அன்று உயிலங்குளம் பகுதியில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப்ரினன்ட் இளந்தேவன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து, கழகக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.
ஒலிப்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் மெய்வல்லுநர் போட்டித் தலைவன் நாகராசா விஜயகுமார் மற்றும் மெய்வல்லுநர் தலைவி முருகேசு சர்மிளாதேவி; ஆகியோரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து வீரர்கள், நடுவர்கள் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதையடுத்து போட்டிகள் ஆரம்பமாகின.
தமிழர் வி.க. 93, தமிழர் வி.க. 94, தமிழர் வி.க.95, யாழ்டன் வி.க., நல்லூர்ஸ்தான் வி.க., அரியாலை ஐக்கிய கழகம் ஆகிய கழகங்களிடையே விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
24 வருடங்களாக பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்டுவரும் இந்த விளையாட்டுப் போட்டிகள் திறம்பட நடைபெறுவதற்கு அயராது உழைத்துவரும் தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்கள், நீதிதவறாத நடுவர்கள் உணர்வுபூர்வமான அறிவிப்புடன் உற்சாகமான கரகோசத்துடன் அழைத்துவரப்பட்டமை மெய்சிலிர்க்கவைத்தது.
தொடர்ந்து கழக வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக அமைந்திருந்தது. மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டிகளின் இறுதிப்போட்டிகளும் கரப்பந்தாட்டப்போட்டிகளின் செற்றப் போட்டிகளும் இடம்பெற்றிருந்தன.
உதைபந்தாட்டப்போட்டிகளில் யாழ்ற்றன் வி.க.முதலிடத்தையும் விண்மீன் வி.க. 2ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் குறித்த விளையாட்டுப்போட்டிகள் தொடர்பாகக் கருத்துரைத்தார்.
தொடர்ந்து வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணமும் பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
தடகளவிளையாட்டு, மற்றும் அனைத்து விளையாட்டுக்கள் என்ற அடிப்படையில் இரண்டு சுற்றுக் கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனடிப்படையில் முதல் இடத்தை நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தை யாழ்ற்றன் விளையாட்டுக்கழகமும் மூன்றாம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93 உம் பெற்றுக்கொண்டன.
நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகம் தொடர்ந்து 3 தடவைகள் முதலிடத்தைப் பெற்று இரண்டு சுற்றுக்கேடயங்களையும் சொந்தமாக்கிக்கொண்டது.
கொடிகள் இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுகண்டன.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

































































