
விவசாயிகளுக்கு ஆதரவான இயக்குநர் கவுதமன் தலைமையிலான போராட்டத்தால், சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன சென்னை கிண்டி, விமானநிலையம், வடபழனி சாலைகள் அனைத்தும் முடங்கிப்போயுள்ளன. கிண்டி வழியாக சென்னைக்குள் எந்த வாகனமும் போக முடியவில்லை, அதேபோல சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியேற முடியவில்லை. இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்படைந்துள்ளனர். கிண்டி முக்கிய பகுதி என்பதால் சென்னை நகரம் முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் கத்திப்பாரா பாலத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட மாணவர் அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்து சென்றனர்.

டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 30 நாட்களாக போராடி வருகின்றனர். உச்சக்கட்டமாக நிர்வாண போராட்டம் கூட நடத்தி விட்டனர். வறட்சி நிவாரண நிதி அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மத்திய வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. கடன் தள்ளுபடி பற்றி அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி சந்தித்தால் மட்டுமே டெல்லியில் இருந்து கிளம்புவோம் என்றும் கூறி போராடி வருகின்றனர்.

