ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியாகியுள்ளது – சிறீலங்காவுக்கான பரிந்துரைகள்

0
132

சிறீலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை பிரதி சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிலங்காவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு –
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முழு அளவிலான பணியகம் ஒன்றை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.
இந்தப் பணியகத்தை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும்.
சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள அனைத்து தனியார் நிலங்களையும் முன்னுரிமை அடிப்படையில், மீளக் கையளிக்க வேண்டும். வர்த்தக மற்றும் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளைத் தழுவி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, நிலைமாறுகால நீதி தொடர்பாக கடப்பாடுகளை காலவரம்புடன் நிறைவேற்றுவதற்காக விரிவான ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டும். அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேரவைக்குச் சமர்ப்பித்துள்ள முன்னைய அறிக்கைகள் மற்றும் தற்போதைய அறிக்கையின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.
இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அல்லது தனியாக ஐ.நா மனிதஉரிமைகள் பொறிமுறைகளின் முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தெளிவான திட்டம் ஒன்று தயாரிக்க வேண்டும்.
நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை வடிவமைக்கும் செயல்முறை, விடயத்தில் பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும்.
உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தும், சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இந்தச்செயல்முறையில் அவருடன் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும். சம்பந்தப்பட்ட சட்டவரைவுகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட, ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதிகளை சிறிலங்காவுக்கு அழைக்க வேண்டும்.
சித்திரவதை, பாலியல் வன்முறைகள், ஏனைய மனித உரிமை மீறல்கள் தடை செய்யப்பட்டுள்ளன, அவை குறித்து விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான எல்லா வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களையும், பாதுகாப்புப்படைகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இராணுவம், புலனாய்வுப் பிரிவு, காவல்துறைக்கு தெளிவான உத்தரவுகள் பகிரங்கமாக விடுக்கப்பட வேண்டும்.
முழு அளவிலான ஆய்வு செயல்முறையை உருவாக்கி , மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க வேண்டும். பொறுப்புக்கூறலை வலுப்படுத்த, பாதுகாப்புத் துறையில் ஏனைய மறுசீரமைப்புகளை நடைமுறைப்படு்த வேண்டும். ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க விண்ணப்பிக்கும் படைப்பிரிவுகள், மற்றும் தனிநபர்கள் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
2016 ஏப்ரல் மே மாத காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர், சுதந்திரமான நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் சமர்ப்பித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அனைத்துலக தர நியமங்களுக்கு எற்ப பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
ஜெனிவா பிரகடனங்கள், மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் குறித்த றோம் பிரகடனம் ஆகியவற்றில் இணைந்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட கட்டளை அல்லது பொறுப்பான உயர்நிலையினர் எந்த தடைகளும் இல்லாமல் பொறுப்புக் கூறத்தக்க வகையில், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிராக குற்றங்கள், இனப்படுகொலை, மற்றும் காணாமலாக்கப்படுவதுதொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அனைத்துலக மனித உரிமைச் சட்ட மற்றும் அனைத்துலக மனிமாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்கு, அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய, கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதன் பொறுப்பை திறம்பட செயற்படுத்துவதற்குத் தேவையான வளங்களை வழங்க வேண்டும்.
மரபணுப் பரிசோதனை, தடயவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை உறுதிப்படுத்தியதாக, காவல்துறை மற்றும் நீதித்துறையின் தடயவியல் திறனை வலுப்படுத்த வேண்டும்.
சிறந்த அனைத்துலக நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரின் வழக்குகளும் மீளாய்வு செய்யப்பட்டு, அவர்களை விடுவிக்க வேண்டும் அல்லது உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
சித்திரவதைகள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
போதிய வளங்கள் மற்றும் ஆணையை முன்னெடுப்பதற்கான தொழில்நுட்பங்களுடன் கூடிய உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை வடிவமைத்து, உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆதரவை வலுப்படுத்தும் வகையில், தேசிய இழப்பீட்டுக் கொள்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் விருத்தி செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here