தமிழறிஞர் மணவை முஸ்தபா மறைவுக்கு வைகோ, ராமதாஸ் இரங்கல்.

0
361

மணவை முஸ்தபா மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழறிஞர் மணவை முஸ்தபா மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,”அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி ஆகிய துறைகளில் பல்லாயிரக்கணக்கான புதிய தமிழ்ச் சொற்களை ஆக்கித் தந்து, தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் தன்னிகர் இல்லாத் தொண்டு ஆற்றிய அறிஞர் பெருந்தகை மணவை முஸ்தபா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த யுனெஸ்கோ கூரியர் இதழ்களைப் படித்து வியந்து இருக்கின்றேன். தொலைக்காட்சிகள் இல்லாத அந்த நாள்களில், உலகின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் புதிய செய்திகளைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த அந்த இதழை விரும்பி படித்து இருக்கின்றேன். அதன் ஒவ்வொரு பதிப்பிலும், நூற்றுக்கணக்கான புதிய தமிழ்ச்சொற்களை ஆக்கி அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார்.தரமான அந்த இதழ் நிறுத்தப்பட்ட பிறகு, கலைச்சொற்கள் ஆக்கும் பணியில் முழுக்க வனத்தையும் செலுத்தினார். தனி ஒரு மனிதனாக எட்டு கலைச் சொற்கள் அகராதிகளை வெளியிட்டுச் சாதனை படைத்தார்.
‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ என்ற இவரது நூல் தமிழக அரசின் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருதை வென்றது. இவரது அரும்பணிகளைப் பாராட்டித் தமிழக அரசு கலைமாமணி விருது அளித்துச் சிறப்பித்தது. மணவை முஸ்தபா அவர்களுடைய இல்லத்திற்கு மூன்று முறை சென்று சந்தித்து உரையாடி மகிழ்ந்து இருக்கின்றேன்.அன்னாரது மறைவு எனக்கு மட்டும் அல்ல; தமிழ் கூறும் நல்லுலகிற்கே பேரிழப்பு. அவரது மறைவால் துயருறும் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். தமிழுக்கும் அறிவியலுக்கும் ஒரே நேரத்தில் மணவை முஸ்தபா அவர்களுக்கு இணையான பங்களிப்பு செய்தவர்கள் யாருமில்லை.
தமிழை செம்மொழியாக்க முஸ்தபா மிகக் கடுமையாக உழைத்தார். இதற்காக பல்வேறு யோசனைகளை தமிழக அரசுக்கு மணவை முஸ்தபா அவர்கள் தான் வழங்கினார்.அறிவியல், மருத்துவம், பொறியியல் சார்ந்த ஏராளமான நூல்களை இவர் பிறமொழிகளில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராக விளங்கினார். கடந்த 2005&ஆம் ஆண்டு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சங்க தமிழ் மற்றும் மொழிப் போராட்டம் பற்றி தொடர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 8 வாரங்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு விழா 27.03.2005 அன்று நடைபெற்றது.அதில் மணவை முஸ்தபா அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தமிழ் மொழியில் சிறப்புகள், ஆற்றல்கள் குறித்து விளக்கச் செய்ததுடன், தமிழ் இலக்கியம், பிழையின்றி தமிழ் பேசுவது குறித்தும் பயிற்சி அளிக்கச் செய்தேன். இதில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் மனவை முஸ்தபா அவர்கள் எழுதிய தூய தமிழ் சொற்கள் அடங்கிய நூலை அனைவருக்கும் பரிசாக வழங்கினேன்.
தமிழ் மொழி வளர்ச்சி குறித்து மணவை முஸ்தபா அவர்கள் என்னுடன் பலமுறை விவாதித்திருக்கிறார்.மணவை முஸ்தபா அவர்களின் மறைவு அறிவியலுக்கும், தமிழுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here