
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, மகிழுந்தில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து நிர்வாணமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில் கார் ஒன்றில் வந்த 05 பேர் கொண்ட கும்பல் அவ்விடத்தில் நின்ற இளைஞனை மகிழுந்தில் நாவற்குழி பகுதிக்கு கடத்திச் சென்று , ஆடைகளை களைந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி , கூரிய ஆயுதங்களால் தாக்கிய பின்னர் , மீண்டும் இளைஞனை காரில் கொண்டு வந்து , பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் வீசி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
அவ்வேளை சற்று தொலைவில் வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறைக் குழுவினர் அதனை அவதானித்து , தப்பிச் சென்ற மகிழுந்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.
அதன் போது மகிழுந்தினுள் ஐவர் காணப்பட்டுள்ளதுடன் , இரண்டு கூரிய வாள்கள் , இரத்தக்கறை தோய்ந்த ரி சேர்ட் , மற்றும் 2.5 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர். அத்துடன் மகிழுந்தினுள் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து குறித்த மகிழுந்தில் பயணித்த ஐவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதேவேளை சித்திரவதைக்கு உள்ளான நிலையில் , குறித்த கும்பலால் வீதியில் வீசப்பட்ட இளைஞனையும் மீட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


