
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் வருடாந்த மகோற்சவம் இன்று (15.06.2026) மதியம் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

வட தமிழீழத்தின் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் இவ்வாலயத்தின் மகோற்சவம், ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை கொடி எடுத்து வரப்பட்டு விசேட வழிபாடுகளுடன் நடைபெறும் கொடியேற்ற வைபவத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகி, அடுத்தடுத்த நாட்களில் விசேட பூஜைகள், அபிஷேகங்கள், சமய நிகழ்வுகள் மற்றும் உற்சவத் திருவீதியுலாக்கள் நடைபெறவுள்ளன.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் நயினாதீவுக்கு வருகை தந்து அம்பாளின் அருளைப் பெறுவதற்காக திரளாகக் கூடிவருகின்றனர்.
பக்தி, பாரம்பரியம் மற்றும் ஆன்மீக மகிமை நிறைந்த இம்மகோற்சவம், தமிழர்களின் முக்கியமான ஆன்மீக விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதேவேளை அமுதசுரபி அன்னதான மண்டபத்திற்கு அன்னையின் திரு உருவப்படம் எடுத்துச் செல்லும் நிகழ்வும் இடம்பெற்றது.

அலையெனத் திரண்டு வரும் அடியார்கள் அனைவருக்கும் அமுதசுரபி அன்னதான மண்டபத்தில் தினமும் அன்னதானம் குறைவின்றி வழங்கப்படுவதும் அம்பாளின் அற்புதங்களில் ஒன்று.

அம்பாளின் திருவருளால் உலகெங்கும் வாழும் பக்தர்கள் அனைவரும் நலனும் வளனும் பெற்று வாழ வேண்டுமென பிரார்த்தித்தபடி, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று இனிதே ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா இடம்பெறுவது அனைவரும் அறிந்ததே.



















