சிறிலங்காவின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 இன்று வியாழக்கிழமை மாலை பிரான்சில் சிறிலங்கா தூதரகம் அமைந்துள்ள PORTE DAUPHINE பகுதியில் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழீழ மக்கள்பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திருச்சோதி, பிரான்சு மூதாளர் அவையைச் சார்ந்த திரு.கிருபைநடராசா, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.சத்தியதாசன் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

கிருபைநடராசா அவர்கள் சிங்கள மொழியில் எமது போராட்டத்தின் நோக்கம் பற்றி ஒலிபெருக்கியில் அறைகூவல் விடுத்தமை அனைவரையும் கவர்ந்திருந்தது.
அத்துடன் அப்பகுதியில் சிறிலங்கா தூதரகம் மட்டுமல்லாது பல நாடுகளின் தூதரகங்களும் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளிலும் எமது போராட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டிருந்தன.
சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக பறந்த சிறிலாங்கா தேசியக்கொடி வழமைக்கு மாறாக அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை எங்கே மறைத்துவைத்துள்ளீர்கள் எனவும் அங்கே ஒலிபெருக்கியில் கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் ஒன்றுகூடல் நிறைவுபெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு


















